கோவை: வேளாண் படிப்பு படித்தால் யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் எளிதாக தகுதி பெறலாம் என மிழ்நாடு வேளாண் பல்கலை டீன்கள் வெங்கடேச பழனிசாமி மற்றும் ரவிராஜ் ஆகியோர் பேசினர்.
வேளாண் படிப்புகள் குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை டீன்கள் வெங்கடேச பழனிசாமி மற்றும் ரவிராஜ் ஆகியோர் பேசியதாவது:
வேளாண் மற்றும் மீன்வளத்துறை படிப்புகள், கடந்தாண்டு முதல் சேர்க்கை செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலை ஒருங்கிணைந்த கவுன்சிலிங் செயல்பாடுகளை பொறுப்பெடுத்து நடத்தும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கட்டுப்பாட்டில், 46 கல்லுாரிகள் உள்ளன. வேளாண், தோட்டக்கலை சார்ந்த 10 படிப்புகளும், பொறியியல் பிரிவின் கீழ், 4 படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
வேளாண் சார்ந்த படிப்புகள் மட்டுமின்றி பொறியியல், வணிகவியல், பொருளாதாரம், மேலாண்மை, கணக்கு பதிவியல், பல்வேறு தொழில்நுட்பங்கள் என பல்துறை பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படும். இதன் காரணமாகவே, பலர் எளிதாக யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் எளிதாக தகுதி பெறுகின்றனர்.
வேளாண் பிரிவில், பி. எஸ்சி., பி.டெக்., படிக்கும் மாணவர்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம், உணவு உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்கள், இயந்திரங்கள் உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் துறை, வங்கிகள், பங்கு சந்தை என அனைத்து துறைகளிலும் சேர இயலும்.
தவிர, யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெற்றி பெற்று, அதிகார பதவிகளுக்கு செல்லவும், விஞ்ஞானிகளாகவும் சிறப்பான தேர்வு இத்துறை.
தொழில்முனைவோராக பல்வேறு வாய்ப்புகள் இங்கு உள்ளன. பிளஸ்2 தேர்வு முடிவுகள் வந்தவுடன், விண்ணப்ப செயல்பாடுகள் இணையதளம் வாயிலாக துவங்கிவிடும். 30 நாட்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.