ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கல்வி நிறுவனத்தில் படிப்பதற்காக மட்டுமே ஜெர்மனி தனது விசாவைத் தருகிறது. அது முழு நேரப் படிப்பாக இருக்க வேண்டும். தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு விசா தரப்படுகிறது. ஜெர்மனிக்குச் சென்று 3 மாதங்களுக்குள் வெளிநாட்டினர் பதிவு மையத்தில் பதிவு செய்து கொண்டு விட்டால் இந்த விசாவானது நீட்டிக்கப்படுகிறது. முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இது நீட்டிக்கப்படுகிறது. பின்பு படிப்பு காலம் முழுவதற்குமாக இது தரப்படுகிறது. படிப்பு முடிந்தவுடன் ஜெர்மனியை விட்டு மாணவர் சென்று விடுவது கட்டாயமாகும்.
விசா பெறுவதற்கு படிப்பில் சேருவதற்காகத் தரப்படும் ஆவணத்தைத் தர வேண்டும். இதன் மூலமாக ஒருவர் உண்மையிலேயே மாணவர் தானா இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. விசா தருவதற்காக நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளை நாம் கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும். படிக்கும் போது தேவைப்படும் ஜெர்மன் மொழித் திறனை குறிப்பிட்ட நபர் பெற்றிருக்கிறாரா இல்லையா என்பதும் உறுதி செய்து கொள்ளப்படுகிறது. விசாவுடன் நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளை மாணவர் ஏற்றுக்கொள்கிறாரா, அதற்கேற்ற மனநிலையைப் பெற்றிருக்கிறாரா மற்றும் படிப்பு முடிந்தவுடன் ஜெர்மனியை விட்டுச் சென்று விடுவாரா, கட்டணம் கட்ட
முடியுமா போன்ற அனைத்து அடிப்படை அம்சங்களும் பரிசோதிக்கப்படுகின்றன.
குறைந்தது 650 யூரோக்களை மாணவரால் ஒரு மாதத்திற்குச் செலவழிக்க முடியுமா என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பகுதி நேர வேலைகளை ஜெர்மனியில் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைத் தாண்டி வேலையைப் பெறும் மாணவருக்கு அதற்கேற்ற விதிமுறைகளும் உண்டு. பட்டப்படிப்புக்கு எந்த வித நிதி உதவியையும் ஜெர்மனியில் வெளிநாட்டினர் பெற முடியாது. ஆய்வுப் படிப்புக்கு மட்டும் சில உதவித் தொகைகள் கிடைக்கின்றன.