இன்று இளைஞர்கள் பலரின், குறிப்பாக இளம் பெண்களின் விருப்பமான துறையாக இருப்பது உளவியல் துறை தான். மனிதர்களோடு பணி நிமித்தமாக அல்லாமலே இணைந்து செயல்படுவது ஒரு அற்புதமான அம்சம் அல்லவா?
அப்படியிருக்கையில், பணியின் ஒரு பகுதியாக மனிதர்களோடு இணைந்து செயல்படுவதும் அவர்களது வாழ்வில் முக்கியமான கட்டங்களில் இணைந்து உதவுவதும் எப்படிப்பட்ட மகிழ்ச்சியான செயல்? எனவே தான் இன்ஜினியரிங் போன்ற தொழிற்படிப்புகளில் படிக்கும் இளைஞர்களும் பெண்களும் கூட உளவியல் துறையை தங்களுடைய எதிர்காலத் துறையாகக் கூறுகிறார்கள்.
இதற்கு மருத்துவத் தகுதி தேவையில்லை. எனினும் துறையின் நுணுக்கங்களை அறிய பல ஆண்டுகள் இதில் பணியாற்ற வேண்டியுள்ளது. பிளஸ் 2 நிலையிலேயே உளவியலைப் படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனினும் அதிகமான வாய்ப்பானது பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் தான் உள்ளது. சமூக உளவியல், குழந்தைகள் உளவியல், தொழில் உளவியல், கிளினிகல் உளவியல், கல்வி உளவியல், பரிசோதனை உளவியல் என இதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. எந்தப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெறுகிறோமோ அதைப் பொறுத்து எதிர்காலத் துறையை
தீர்மானிக்க முடியும்.
பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசுத் துறை நிறுவனங்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் என எத்தனையோ வாய்ப்புகளை துறையினர் பெறுகின்றனர். சமூக மேம்பாட்டு அமைப்புகள், ஆய்வுக் கூடங்கள், மறுவாழ்வு மையங்கள், இளைஞர் வளமையங்கள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் என கூடுதல் வாய்ப்புகள் தரும் வழிகளும் உள்ளன.
பொதுவாக இவர்கள் இவற்றில் ஒரு மருத்துவரின்கீழ் பணியாற்றுகின்றனர். அடிப்படையில் மிகவும் சவாலாகவும் ஆர்வத்தைத் தருவதாகவும் இத்துறையின் பணி வாய்ப்புகள் உள்ளன.