தைரியமும், தியாக உணர்வும் தேவைப்படும் பணி! | Kalvimalar - News

தைரியமும், தியாக உணர்வும் தேவைப்படும் பணி!

எழுத்தின் அளவு :

இயற்கையின் பேரிடர்கள் எதிர்பாராத விதமாக, அவ்வப்போது தாக்கிக்கொண்டே இருக்கின்றன. தற்போதைய உத்ரகாண்ட் பேரழிவு அதற்கு ஒரு உதாரணம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, உயிர் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்படுகின்றன. மீட்பு பணிகள் முடிந்தளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன.

இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போதுதான், நமக்கு பேரிடர் மேலாண்மையின் முக்கியத்துவம் புரிகிறது. அதில், சிறப்பு பயிற்சிபெற்ற நபர்களின் தேவை உணரப்படுகிறது.

வெறும், மழை வெள்ளம், பூகம்பம், சுனாமி, நிலச்சரிவு போன்ற இயற்கை சார்ந்த தாக்குதல்களுக்கு மட்டுமே, பேரிடர் மேலாண்மை தேவைப்படுவதில்லை. தொழில்மயமாக்கப்பட்ட நகர்ப்புறங்களில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களினால் நிகழும் அழிவுகளுக்கும், பேரிடர் மேலாண்மை அவசியம்.

இன்றைய நிலையில், நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் பெரியளவில் இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பெரிய பெரிய கட்டடங்கள் பெருகி வருகின்றன. நிறைய தொழிற் சாலைகள் இயங்குகின்றன. இதுபோன்ற சூழல்களில், பெரிய தீ விபத்துக்கள், நச்சுவாயு உள்ளிட்ட பலவித வாயுக்களின் எதிர்பாராத கசிவுகள், கட்டட இடிபாடுகள், தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அசாதாரணமான சூழல்களைக் கையாள பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் கட்டாயம் தேவைப்படுகிறார்கள்.

நெட்வொர்க்கிங், தகவல்கள், அனுபவங்கள் மற்றும் திறன்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளுதல் போன்றவை, இயற்கை பேரிடர்களின்போது தேவைப்படும் முக்கிய செயல்பாடுகள்.

பணி நிலைகள்

பேரிடர் சூழல்களைக் கையாள, பேரிடர் மேலாளர்கள், சமூகங்களுக்கான செயல்திட்டங்களை உருவாக்குகிறார்கள். பேரிடர் மேலாண்மைப் பணி, முற்றிலும் சேவை அடிப்படையிலான ஒன்றாகும். சமூகத்தின் மீது ஒரு அக்கறையும், கருணையும் இல்லாமல், பேரிடர் மேலாண்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்வது கடினம்.

இந்தப் பணி ஒருவருக்கு பிடித்துப்போனால், நெருக்கடி சேவைகள், உள்ளூர் நிர்வாகங்கள், நிவாரண ஏஜென்சிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சர்வதேச ஏஜென்சிகள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

சம்பளம்

முதுநிலைப் படிப்பை முடித்து, புதிதாக பணிக்கு சேரும் ஒருவர், ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் எதிர்பார்க்கலாம். பிறகு, அனுபவமும், திறனும் கூட கூட, சுமார் 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறலாம்.

நீங்கள் கற்பது என்ன?

பேரிடர் மேலாண்மையில் எம்.ஏ., படிப்பானது, அறிவியல், பொறியியல், கலை மற்றும் வணிகம் போன்ற பல்வேறு பின்னணிகளிலிருந்தும் மாணவர்களைக் கொண்டதாக இருக்கிறது.

இயற்கை மற்றும் செயற்கை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை எவ்வாறு நிறைவு செய்வது, மீட்புப் பணி செயல்பாடுகள், உணவு, உடைகள், மருத்துவ உதவு, உறைவிடம் மற்றும் மறுவாழ்வு அம்சங்களை எப்படி வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள், இப்படிப்பில் கற்றுத்தரப்படுகின்றன.

தயார் நிலை மற்றும் மனோதிடம்

பேரிடர் மேலாண்மைக் குழுவானது, தனது செயல்பாட்டு நிலையில், சிறப்பான ஏற்பாடுகளுடன் இருக்க வேண்டும். மருத்துவ உதவிகளை அளிக்கும் குழுவானது, வாரத்தில் 24 மணிநேரமும் மக்கள் அணுகும்படியாக இருக்க வேண்டும்.

உறக்கம், ஓய்வு, சுக துக்கம் போன்றவற்றை பல சமயங்களில் மறக்க வேண்டியிருக்கும். ஏனெனில், இந்தப் பணியும் ஒரு போர் வீரரின் பணியைப் போன்றதே. எனவே, தைரியம், துணிச்சல் மற்றும் தியாக உணர்வு போன்றவை இப்பணிக்கு மிகவும் முக்கியமான அம்சங்கள்.

படிப்பு - பேரிடர் மேலாண்மையில் எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., பட்டப் படிப்புகள்

இப்படிப்பிற்கான முக்கிய கல்வி நிறுவனங்கள்

National institute of disaster management
University of North Bengal
International centre of Madras university
Mahatma Gandhi university
Disaster management institute
Centre for disaster management, Maharashtra.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us