வேளாண் பொருளியல் | Kalvimalar - News

வேளாண் பொருளியல்

எழுத்தின் அளவு :

முதுநிலை வேளாண் பொருளாதார படிப்பு, ஏராளமான வேலை வாய்ப்புகளைத் தருவதோடு, பல தொழில் முனையும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. மேலும், வேளாண்மையைப் பற்றிய பரந்த அறிவைத் தருவதோடு, அதனுடன் தொடர்புடைய பொருளாதார அம்சங்கள் பற்றியும் விவரிக்கிறது.

இப்படிப்பின் பரந்த வாய்ப்புகள்

பொருளாதாரத்தின் கோட்பாடுகள், இத்துறைக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில், வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதால், பொருளாதார கோட்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நிலம், பணியாட்கள் மற்றும் முதலீடு ஆகியவற்றை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது தொடர்பான அம்சங்களில் இப்படிப்பு கவனம் செலுத்துவதோடு, மைக்ரோ எகனாமிக்ஸ் தொடர்பான கோட்பாடுகளின் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது.

வேளாண் பொருளியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு ஏற்ற வகையில், இளைஞர்களை இப்படிப்பு தயார்படுத்துகிறது. வேளாண்மை மற்றும் பொருளாதார மேலாண்மை தொடங்கி, அக்ரோ இன்டஸ்ட்ரியல் மேலாண்மை வரை, இப்படிப்பு கவனம் செலுத்துகிறது.

பாடத்திட்டம்

பொருளாதார மேம்பாட்டில் வேளாண்மையின் பங்கு தொடர்பான அனைத்து அம்சங்களையும் இந்தப் படிப்பு விவாதிக்கிறது. உற்பத்தி மேம்பாட்டுக் காரணிகள், வேளாண் திட்டமிடுதல், வேளாண் துறை சீர்திருத்தங்கள் தொடர்பான கொள்கைகள், வேளாண்மை மேம்பாட்டின் மாதிரிகள் மற்றும் இந்திய வேளாண்மையிலுள்ள சிக்கல்கள் ஆகியவைத் தொடர்பான பொருளாதார கொள்கை மற்றும் அம்சங்களை இப்படிப்பு ஆராய்கிறது.

பசுமைப் புரட்சியை புரிந்துகொள்ளல்

இந்திய வேளாண்மை, வேளாண்மை உள்ளீடுகள், வேளாண் மார்க்கெடிங் மற்றும் வேளாண் நிதி ஆகிய அம்சங்களின் மீது பசுமைப் புரட்சி என்ற நடவடிக்கை ஏற்படுத்திய நன்மை மற்றும் தீமைகள் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். கிராமப்புற மேலாண்மையில், வேளாண்மை செயல்பாடு முக்கிய பங்கு வகிப்பதால், வேளாண்மை மூலமாக கிராமத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் வியூகங்களை அறிந்திருப்பது கட்டாயம்.

WTO கொள்கைகளின் தாக்கங்கள், இந்திய வேளாண்மையின் பலம் மற்றும் பலவீனங்கள், நெருக்கடி மேலாண்மை, விலை கொள்கை, பாசன கொள்கை, பல்-பொருள் பரிமாற்றங்கள் மற்றும் வேளாண்-காலநிலை திட்டமிடல் போன்றவை இதர முக்கிய விஷயங்கள் ஆகும்.

வேளாண்மையில், ப்ரோகிராமிங் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றில், Linear மற்றும் Timing போன்ற பல மாதிரிகள் உள்ளன. இவை உணர்த்துவது என்னவெனில், பலவிதமான வேளாண்மை புரோகிராம்கள், எவ்வாறு குறிப்பிட்ட வகை பார்வையாளர்களுக்காக உள்ளன என்பதை உணர்ந்து கொள்வதாகும்.

ஸ்பெஷலைசேஷன் தேர்வு

இப்படிப்பின் இரண்டாமாண்டில், மாணவர் தனக்குப் பிடித்தமான ஸ்பெஷலைசேஷனை தேர்வுசெய்ய வேண்டும். ஏனெனில், ஆராய்ச்சிக்காகவும் அதன்பிறகு 6 மாதங்களுக்கு தீசிஸ் எழுதவும், மாணவர் இதை செய்ய வேண்டும்.

ப்ரொடக்ஷன் எகனாமிக்ஸ், அக்ரிகல்சர் மார்க்கெடிங், பிளானிங், பாலிசி மற்றும் பைனான்ஸ் அன்ட் இன்சூரன்ஸ் ஆகிய பல பிரிவுகளில் ஸ்பெஷலைசேஷன்கள் உள்ளன. அனைத்து ஸ்பெஷலைசேஷன்களிலும், M.Sc., in Agriculture Economics எனும் இந்தப் படிப்பானது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அதன் நீடித்தப் பயன்பாடு ஆகிய இந்த நேரத்திற்கான தேவை குறித்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது.

வேளாண் ஆராய்ச்சி சேவை(ARS) தேர்வு

M.Sc., in Agriculture Economics படிப்பை முடித்தப்பிறகு, அகில இந்திய அளவிலான Agricultural Research Service தேர்வையெழுதி தேர்ச்சி பெற்று, வேளாண் ஆராய்ச்சி சேவை மையத்தில், ஆரம்பநிலை விஞ்ஞானி என்ற பணி வாய்ப்பை பெறலாம். சில வருட பணி அனுபவம் மற்றும் உங்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், முதன்மை விஞ்ஞானியாக பணி உயர்வு அளிக்கப்படும்.

இந்த முதன்மை விஞ்ஞானி என்ற ஸ்தானம், இந்திய விஞ்ஞானிகள் சமூகத்தில், ஒரு நல்ல மதிப்பு வாய்ந்த பதவியாகும் என்பதை மறக்க வேண்டாம்.

பணி வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகள்

இப்படிப்பை முடித்த பல மாணவர்கள், நிதி நிறுவனங்கள், வங்கித் துறைகள், கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள் மற்றும் பொருள் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் பணிக்கு செல்கிறார்கள்.

வங்கித் துறையை எடுத்துக்கொண்டால், வேளாண் மேம்பாட்டு அதிகாரி என்ற பணி கிடைக்கும். பொருட்கள் பரிமாற்ற துறையில், டேட்டா அனலிஸ்ட் என்ற பணி கிடைக்கும். மார்க்கெட் டிரெண்ட் அல்லது விலைவாசி டிரெண்ட், மார்க்கெட் எவ்வாறு செயல்படுகிறது, எதிர்கால வணிகத்திற்கான டிரெண்ட் என்ன? மற்றும் நஷ்டத்திலிருந்து காத்துக்கொள்ளல் போன்ற விஷயங்களை பகுப்பாய்வு செய்வதே இத்துறைக்கான டேட்டா அனலிஸ்ட் பணியாகும்.

வங்கிகளைப் பொறுத்தவரை, ஆரம்ப கட்டத்தில், ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், இதர தனியார் நிறுவனங்கள் அல்லது பார்மசிகள் ஆகியவற்றில் பணி கிடைத்தால், ஆரம்ப நிலையில், ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

தொழில் முனைவோராக மாறுதல்

இளநிலை படிப்பு நிலையில், வேளாண்மையைப் பற்றிய அடிப்படை அறிவை ஒரு மாணவர் பெறுகிறார். அதேசமயம், M.Sc., in Agriculture Economics என்ற முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்த பின்னர், பலவிதமான தொழில்நுட்பங்கள், பயிர் செய்தலுக்கான செலவு மற்றும் பகுதி வாரியான சிக்கல்கள் குறித்த அறிவைப் பெறுகிறார் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் கலையையும் கற்றுக் கொள்கிறார்.

இதன்மூலம், அவர் சொந்தமாக தொழில் தொடங்கும் வல்லமையைப் பெறுகிறார். உதாரணமாக, வேளாண்மை விதை தயாரிப்புத் துறையில், பல தனியார் நிறுவனங்கள் நல்ல முறையில் ஈடுபட்டு வருகின்றன. ஏனெனில், நல்ல வேளாண்மை விளைச்சலை கொடுக்கும் வகையில், நல்ல தரமான விதைகளை தயாரிப்பதென்பது, ஒரு நுட்பமான பணியாகும்.

சவால்கள்

இத்துறையைப் பொறுத்தவரை, பணிக்கு பணி, சவால்கள் மாறுபடும். உதாரணமாக, கலெக்ஷன் மற்றும் டேட்டா அனலிசிஸ் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தில் ஒருவர் பணிபுரிந்தால், அவருக்கு, நல்ல பகுப்பாய்வு திறன் இருப்பது முக்கியம். இன்றைய நிலையில், அக்ரி மார்க்கெடிங் என்பது பலவீனமான நிலையில் இருக்கிறது.

சந்தைப் பகுப்பாய்வு மற்றும் சந்தைப் பற்றிய எதிர்கால கணிப்பு ஆகியவற்றில் இத்துறை நிபுணர்கள் ஈடுபட்டு, மொத்த விஷயங்களையும் புரிந்துகொள்ள முடியும். ஒரு விவசாயிக்கு, தான் உற்பத்தி செய்யும் பொருளை, இடைத்தரகர்கள் தொந்தரவின்றி, பயனாளிக்கு நேரடியாக கிடைக்கச் செய்யும் வண்ணம் உதவி செய்யும் வகையில், இத்துறை பட்டதாரி ஒரு விரிவான வேளாண்மை அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us