குடும்பச் சூழலால் மேற்படிப்பை நேரடி முறையில் தொடர முடியாதவர்கள் நம்மிடையே அதிகம் உள்ளனர். என்றாலும் இவர்களில் பலர் எத்தனை இன்னல்கள் இருந்தாலும் அதைத் தாண்டி மேலே படித்து வளமான
எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்று கடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இது போன்றவர்களில் ஒருவரான நீங்கள் திறந்த வெளி முறையில் பயிலுவதற்கான குறைந்த பட்ச வயதை எட்டியிருக்கிறீர்களா என்பதை குறிப்பிடவில்லை. வயது தகுதி இருக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் படிப்பை மேற்கொள்ள முடியும்.
தமிழ் அல்லது உளவியல் இரண்டில் எந்த படிப்பு என்பதை தீர்மானிப்பது கொஞ்சம் கடினமானது தான். அடிப்படையில் இந்த 2 பிரிவுகளில் எதில் அதிக ஆர்வமுள்ளவர் அல்லது எது பிடிக்காது என்பது ஒரு காரணமாக இருக்கும். தமிழ் பட்டப்படிப்பானது தமிழ் மீடியத்திலேயே படிக்க முடியும்.
உளவியல் பிரிவை தமிழிலா ஆங்கிலத்திலா படிக்க வேண்டும் என்பது மற்றொரு காரணம். எந்த படிப்பு படித்தாலும் அதை மிகச் சிறப்பாக அதாவது பல்கலைக்கழகத்திலேயே முதலாவது 2வது என்ற உயர்ந்த தரத்தில் நன்றாக புரிந்து படிப்பதும் மிக அவசியம். இந்த அடிப்படையில் நீங்கள் தான் உங்களது படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.