இந்த பூமியில் பெரும் பரப்பளவைக் கொண்டிருக்கும் கடல், மனித வாழ்வில் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயுள்ளது. எனவே, கடல் சார்ந்த ஆய்வுகளுக்கு, மனித நடவடிக்கைகளில் எப்போதுமே பஞ்சமில்லை.
நிலத்தில் இருப்பதைவிட, கடலில் வசிக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை மிக அதிகம். மேலும், இந்த பூமியின் சூழ்நிலை சமன்பாட்டில் கடல்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தொழில்நுட்பம் அன்றாடம் வளர்ந்து வரும் ஒரு யுகத்தில், ரோபோ போன்ற தொழில்நுட்பங்கள் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்ப்பவை. எதிர்காலத்தில், ரோபோக்கள் மனித வாழ்வில் பெரும் பங்களிப்பை அளிக்க வல்லவை என்ற கருத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு விட்டன.
எனவே, மேற்கண்ட இரு துறைகளிலும் தங்களின் படிப்பை மேற்கொண்டவர்களுக்கு, பணி வாய்ப்புகள் எப்படி? மற்றும் வெற்றியடைவதற்கு அவர்கள் எத்தகைய திறன்களைக் கொண்டிருக்க வேண்டுமென்று இக்கட்டுரை அலசுகிறது.
கடல்சார் பொறியியல்
நீர் விளையாட்டு மற்றும் கடற்கரை சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, ocean engineering எனப்படும் கடல்சார் பொறியியல் துறை ஏற்றது. கடல்சார் பொறியியல் துறை, பல்வேறான பொறியியல் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாக திகழ்கிறது.
ஏனெனில், இதன்மூலமே, பெருங்கடல் மற்றும் கடற்கரையில் இயக்கக்கூடிய சிஸ்டங்களை மேம்படுத்த முடியும். இத்துறையானது, marine biology, oceanography, geophysics and marine geology உள்ளிட்ட துறைகளை இணைக்கும் ஒரு பெரிய பாலமாக கருதப்படுகிறது.
கடல்கள் பற்றிய நமது புரிதலில் பெரும் மாற்றங்களை உருவாக்கக்கூடிய புதிய உபகரணங்கள் மற்றும் வடிவமைப்புகளை உருவாக்கும் பணியில் கடல்சார் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
பணி வாய்ப்புகள்
Ocean engineers எனப்படும் கடல்சார் பொறியாளர்கள், கடலில் பணி செய்யாத offshore பொறியாளர்கள், மரைன் பொறியாளர்கள், நீருக்கடியில் ஒலிசார்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள், கடற்கரை சார் பொறியாளர்கள் மற்றும் ஜியோடெக்னிக்கல் பொறியாளர்கள் ஆகிய நிலைகளிலும் பணியாற்றலாம்.
தேவைப்படும் திறன்கள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வடிவமைப்பு, ஸ்கெட்சிங் மற்றும் பில்டிங், படைப்புத்திறன், விபரங்களை கவனமாக கேட்டல், பகுப்பாய்வு சிந்தனை, கணிதம் மற்றும் கணக்கீட்டு ரீதியிலான பகுப்பாய்வு, ஆராய்ச்சி, பரப்பளவு தொடர்பான பகுப்பாய்வு, தண்ணீர் மற்றும் ஈரநிலம் சார்ந்த பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறான திறன்கள், இத்துறை சார்ந்த பொறியாளர்களுக்கு இருக்க வேண்டும்.
ரோபோடிக்ஸ்
ரோபோட்களின் வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் மற்றும் பயன்பாடு ஆகியவை தொடர்பான தொழில்நுட்பம்தான் ரோபோடிக்ஸ். கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் மற்றும் கணினி அறிவியல் மற்றும் இன்டராக்டிவ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் ஒரு ஸ்பெஷலைசேஷன் பாடமாக, ரோபோடிக்ஸ் கற்பிக்கப்படுகிறது.
இத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், மனித - ரோபோட் தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு, மெடிக்கல் ரோபோடிக்ஸ், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் சென்சார்கள், தானியங்கி நேவிகேஷன் அமைப்புகள், கைன்மேடிக்ஸ், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் அமைப்புகள், ஏரோநாடிக்ஸ் மற்றும் வான்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்புடையதாக இருக்கிறது.
பணிகள்
இத்துறை தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டு, பணி வாய்ப்புகளையும் அதிகளவில் வழங்கிவரும் ஒரு துறையாக உள்ளது. இத்துறை படிப்பில் பட்டம் பெற்றவர்கள், பொறியாளர்களாகவோ அல்லது ஆராய்ச்சியாளர்களாகவோ பணியாற்ற முடியும்.
மேலும், டிசைனர்களாக பணியாற்றுவதுடன், ரோபோடிக்ஸ் கருத்தாக்கத்தை, உளவியல், உயிரியல், வேதியியல் மற்றும் பயோஇன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தவும் முடியும்.
தேவைப்படும் திறன்கள்
தொழில்நுட்பம் குறித்த பரந்த அறிவுடன் கூடிய பகுப்பாய்வு சிந்தனை, அறிவியல், இயற்பியல் மற்றும் ரோபோடிக்ஸ், சிக்கலான பிரச்சினைகளை தீர்க்கும் திறன், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பற்றிய அறிவு, கணிப்பொறி புரோகிராம்களை கையாளும் திறன், நுண்ணறிவு சிந்தனை, தர்க்கரீதியான சிந்தனை, புத்தாக்க தீர்வுகளுடன் பிரச்சினைகளை அணுகும் திறன் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், விரிவான வகையிலான ஐடியாக்களைப் பெற்றிருத்தல் மற்றும் அவற்றோடு கூடவே, வலுவான நிதித்துறை திட்டமிடுதல் திறனையும் கொண்டிருக்க வேண்டும். மேலும், ரோபோடிக்ஸ் துறையின் வளர்ச்சி குறித்த updated தகவல்களை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்.