ரீடெயில் துறை என்பது நமது அந்த கால பலசரக்குக் கடை போன்ற சமாச்சாரம் தான். இந்த காலத்துக்கேற்ப கடைகள் நவீனமாகவும் வசதியுடையதாகவும் இவை மாறியிருக்கின்றன. இதற்கான முதலீடு என்பது முன் போல அல்லாமல் இப்போது பெரிய அளவில் தேவைப்படுகிறது. அதாவது சில ஆயிரங்கள் இருந்தால் போதும் என்பது மாறி பல லட்சங்களோ அல்லது கோடிகளோ தேவைப்படும் துறையாக இது மாறியிருக்கிறது.
இன்றைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய கலாச்சார மாறுதல்களுக்கேற்ப இன்று சமையல் எண்ணெய் வாங்கும் கடையிலேயே மொபைலுக்கு ரீசார்ஜ் போட முடிகிறது. காய் வாங்கும் கடையிலேயே கார் கூட வாங்க முடிகிறது. இதில் இந்திய அளவிலும் உலக அளவிலும் இயங்கும் மிகப் பெரிய நிறுவனங்கள் கால் பதித்திருக்கின்றன. ரிலையன்ஸ், வால்மார்ட் போன்றவை தான் இவை.
ரீடெயில் துறை எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை எட்டவில்லை என்றாலும் இந்தியாவில் 2010ம் ஆண்டில் இத்துறைக்கான வளர்ச்சி வாய்ப்பு அதிகம் இருப்பதாக வேலை ஆலோசகர்கள் கருதுகின்றனர்.