கலை மற்றும் அறிவியல் துறைகளில் அரிதான சில துறைகள் உள்ளன. பெரும்பாலான மாணவர்கள் இத்துறையைத் தேர்வு செய்வதில்லை. துறையின் மீதான தனிப்பட்ட ஆர்வம் மட்டுமே இதுபோன்ற துறைகளை மாணவர்களைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன. கல்வெட்டியல் துறையும் அதுபோன்ற ஒன்றே. இப்படிப்பு தொல்லியல்துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். தமிழ், சமஸ்கிருதம், வரலாறு, தொல்லியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் தங்கள் கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ளவும் இதுபோன்ற படிப்புகள் உதவுகின்றன. வேலைவாய்ப்புக்காக அன்றி, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் புராதனங்களில் ஈடுபாடு உடையவர்களாலும் கற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கல்வெட்டுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றை இனம் காணும்அளவுக்கு போதிய பயிற்சி மிக்கவர்கள் இல்லை என்பதே உண்மை. இதனால், இத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அறநிலையத்துறை, மொழி மற்றும் பண்பாடு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு தேடுவோருக்கும் கூடுதல் தகுதியாக கல்வெட்டியல் படிப்பு உறுதுணையாக இருக்கும். இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் தமிழில்தான் மிகஅதிகளவு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் கன்னடமொழிக் கல்வெட்டுகள் 10, 600 வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் நான்காவது அளவாக முறையே சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் காணப்படுகின்றன. கல்வெட்டியல் தொடர்பான ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பை கல்வெட்டியல் கல்விநிறுவனம் வழங்கி வருகிறது. 1973ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம் தொல்லியல்துறையின் ஓரங்கமாகும். இப்படிப்பில் சேர கல்விக்கட்டணம் எதுவுமில்லை. மாறாக, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு எட்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது. தமிழ், வரலாறு, தொல்லியல் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதே இதற்கான கல்வித்தகுதியாகும். மேலும் விவரங்களுக்கு டttணீ://தீதீதீ.tணச்ணூஞிட.ஞ்ணிதி.டிண/ஞுணீடி.டtட் என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.