தேசிய கல்வி ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் என்னும் என்.சி.இ.ஆர்.டி., சமீபத்தில் குழந்தைகளின் கல்வியறிவு தொடர்புடைய ஒரு ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் ஒரு குழந்தையின் கல்வியறிவை தீர்மானிப்பதில் அந்த குழந்தையின் தந்தையுடைய கல்வியறிவை விட தாயின் கல்வியறிவே அதிக பங்கு வகிப்பது அறியப்பட்டது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தியாவிலுள்ள 33 மாநிலங்களிலுள்ள 266 மாவட்டங்களில் இது நடத்தப்பட்டது. இதற்கான முயற்சிகள் 6828 பள்ளிகளில் பயிலும் 84 ஆயிரத்து 322 மாணவர்களிடமும் 14 ஆயிரத்து 810 ஆசிரியர்களிடமும் இது நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் வெளியான மேலும் சில முக்கிய தகவல்கள் இங்கே தரப்படுகிறது.
* ஒரு மாணவரின் தந்தை பட்டதாரியாக உயரும் போது அந்த மாணவரின் கல்வி கற்கும் திறன் 7 முதல் 11 சதவீதமாக உயருகிறது. அதே மாணவரின் தாய் பட்டதாரியாக உயரும் போது அந்த மாணவரின் கல்வி கற்கும் திறனானது 9 முதல் 13 சதவீதமாக உயருகிறது.
* பொதுவான பாடப் புத்தகங்களுடன் சேர்த்து நாளிதழ் போன்ற கூடுதல் உபகரணங்கள் கிடைக்கும் போது அது மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. ஒரு மாணவரின் கற்கும் திறமையை அது 8 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
* ஒரு மாணவரின் மொழியறிவும் கல்வி கற்கும் திறனை பெரிதும் நிர்ணயிக்கிறது. வீட்டில் பேசப்படும் மொழியிலேயே பாடங்களைப் படிக்கும் போது அதனால் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதும் அறியப்பட்டது.
* ஒரு பள்ளியைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஈடுபாடும் பள்ளிகளின் வெற்றியை மேம்படுத்துகின்றன.
* 5ம் வகுப்பு அளவில் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய பகுதிகளிலும் அடிப்படைத் தேவைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் எந்தப் பள்ளிகளில் நல்ல உள்கட்டமைப்பு, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள், சமூக ஈடுபாடு நல்ல விதத்தில் இருந்ததோ அங்கு மாணவர்கள் கணிதம், சுற்றுச்சூழல் படிப்புகள், மொழிகள் போன்றவற்றில் சிறந்து விளங்குவது கண்டறியப்பட்டுள்ளது.