தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்.
வளர்ந்த நாடாக இந்தியா உருவாகும் போது விவசாயத்தின் நிலை என்ன?
- ராஜபிரபு, பி.எஸ்.என்.ஏ., கல்லூரி, திண்டுக்கல்
- சதீஷ்ராஜா, குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி, கரூர்
நம் நாட்டில் 70 கோடி மக்கள் இன்னும் கிராமத்தில் வாழ்கிறார்கள். இதற்காக குறைந்தபட்சம் 7 ஆயிரம் கிராமங்களை நகர்ப்புறங்களுக்கு இணையான வசதி கொண்ட தொகுப்புகளாக மாற்ற வேண்டும். இதனால் அக்குறிப்பிட்ட கிராமங்களுடன் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சாலை வசதிகள், மின்னணு வசதி, தொலைதொடர்பு வசதி கிடைக்கும். அக்கிராமங்களும் முன்னேற்றம் அடையும். தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள வல்லம் கிராமம் 65 கிராமங்களை தன்னுடன் இணைத்து நகர்ப்புறத்துக்கு இணையாக திகழ்கிறது. வளர்ந்த நாடாக மாறும்போது கிராமங்கள் வளர்ந்தால்தான் விவசாயமும் விளைபொருட்களும் உயரும்.
இன்றைய வாழ்க்கையில் அறிவியல் இரண்டற கலந்துவிட்டது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
- தீபக் ராஜ், குலப்பட்டி பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் பள்ளி, கொளத்தூர்
‘டிவி’ ரேடியோ, தொலைதொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் அறிவியலின் விளைவுகளே. எதிர்காலத்திலும் இவற்றில் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும். பண்ணைகளில் உற்பத்தியை பெருக்குவது, கடலில் குறிப்பிட்ட இடங்களில் மீன்களை அறிவது, வானிலை அறிக்கை ஆகிய அனைத்துமே அறிவியல் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்.
இந்தியா முழுவதும் ஆறுகளை எப்போது இணைப்பார்கள்?
- ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு
ஆறுகளை இணைப்பது மிகுந்த பலன் தரக்கூடியது. மத்திய பிரதேசத்தில் சிறு ஆறுகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் தலைமுறைக்கு இது முக்கியமான பணி.