சென்னை: சேலம் பெரியார் பல்கலை உள்ளிட்ட மூன்று பல்கலைகளில், திறந்தநிலை படிப்பில் மாணவர்களை சேர்க்க, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது.
பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், திறந்தநிலை படிப்பு மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்க, 2020ம் ஆண்டு, யு.ஜி.சி., சார்பில், புதிய ஒழுங்கு முறைகள்அமலுக்கு வந்தன. அவற்றை பின்பற்றியே, திறந்தநிலை படிப்புகளை நடத்த வேண்டும்.
திறந்த நிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளில் சேரும் மாணவர்கள், யு.ஜி.சி.,யின் தொலைநிலை கல்வி பிரிவான டி.இ.பி.,யின், https://deb.ugc.ac.in/ என்ற இணையதளத்தில், தாங்கள் சேர உள்ள கல்லுாரி அல்லது பல்கலையானது, யு.ஜி.சி.,யிடம் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய அளவில், மூன்று உயர்கல்வி நிறுவனங்களில், திறந்தநிலை பல்கலை அல்லது ஆன்லைன் படிப்பில் மாணவர்கள் சேர, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில், பெரியார் பல்கலையும், ஆந்திராவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலையும் இடம் பெற்றுள்ளன. எனவே, மாணவர்கள் படிப்பில் சேரும் முன் எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.