மனோசித்ரா (பிளஸ் 2 மாநில 3 ம் இடம்) - 2010
எழுத்தின் அளவு :
டிவி பார்ப்பதை தவிர்த்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. மேலும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுவதே என் எதிர்கால குறிக்கோள், என, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி மனோசித்ரா தெரிவித்தார்.
நாமக்கல் காவேட்டிப் பட்டி குறிச்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்தவர் மாணவி மனோசித்ரா. இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1185 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடவுள் அருளால் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்க திட்டமிட்டுள்ளேன். ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று கலெக்டராகி, மக்களுக்கு சேவை செய்வது எனது எதிர்கால குறிக்கோள்.
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு, எனக்கு உறுதுணையாக இருந்தனர். தேர்வு சமயம் மட்டுமின்றி, எப்போதுமே, டிவி பார்க்கமாட்டேன். டிவி பார்ப்பதை தவிர்த்ததால், அதிக மதிப்பெண் முடிந்தது. எஸ்.எஸ்.எல்.சி.,யில், 484 மதிப்பெண் பெற்றேன். அப்போது மாநில அளவில் ரேங்க் பெற முடியவில்லை. பிளஸ் 2வில் மாநில அளவில் ரேங்க் பெற்றிருப்பது பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாணவி மனோ சித்ரா பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் பின்வருமாறு: தமிழ் - 195, ஆங்கிலம் - 192, கணிதம் - 200, இயற்பியல் - 199, வேதியியல் - 199, கம்யூட்டர் சயின்ஸ் - 200 மதிப்பெண் பெற்றுள்ளார். மனோ சித்ராவின் தந்தை, நாமக்கல் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இளநிலை இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவரது அன்னை பிரேமலதா குடும்பத்தை பராமரித்து வருகிறார். சகோதரர் ஜவகர் இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதியுள்ளார். மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி மனோ சித்ராவை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் ஆகியோர் பாராட்டினர்.