நீதிமன்றங்களில் வாதாடுதல் மட்டுமின்றி பல்வேறு புதிய பரிணாமங்களை பெற்று, பெரும் வளர்ச்சி அடைந்துள்ள சட்டத்துறை, இன்றைய இளைஞர்களின் பிரதான விருப்பங்களில் ஒன்றாக திகழ்கிறது.
சட்டக் கல்வியியை சீரிய முறையில் பயிற்றுவிக்கும் நோக்கில், சென்னையில் துவக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அதன்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் 2019-20ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பல்கலைக்கழக படிப்புகள்:
ஒருங்கிணைந்த ஹானர்ஸ் படிப்புகள் (5 ஆண்டுகள்) - பி.ஏ.எல்எல்.பி., பி.காம்.எல்எல்.பி., பி.பி.ஏ.எல்எல்.பி., பி.சி.ஏ.எல்எல்.பி.,,
ஹானர்ஸ் படிப்பு (3 ஆண்டுகள்)- எல்எல்.பி.,
முதுநிலை படிப்பு (2 ஆண்டுகள்)- எல்எல்.எம்.,
தகுதிகள்:
5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் படிப்புகளுக்கு, 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு ஹானர்ஸ் படிப்பிற்கு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் முறையே 60 சதவீதம் மற்றும் 55 சதவீதம் பெற்றிருந்தால் போதுமானது. எல்எல்.பி., படிப்பிற்கு இளநிலை சட்டப்படிப்பில் குறைந்தது 45 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சட்டக்கல்லூரிகள்:
தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக்கல்லூரிகளான சேலத்தில் அமைந்திருக்கும் மத்திய சட்டக்கல்லூரியும், தின்டிவனத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி சட்டக்கல்லூரியும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டக்கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 3 ஆண்டு எல்எல்.பி., மற்றும் 5 ஆண்டு பி.ஏ.எல்எல்.பி., சட்டப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையினை, ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர சேர்க்கை முறையில் நடத்திவருகிறது.
சட்டக்கல்லூரிகள் வழங்கும் படிப்புகள்:
பி.ஏ.எல்எல்.பி., - 5 ஆண்டுகள்
எல்எல்.பி., - 3 ஆண்டுகள்
மொத்த இடங்கள்: 1,411
தகுதிகள்: 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு, 12ம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடனும், 3 ஆண்டு படிப்பிற்கு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது, 45 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் இரண்டு படிப்பிற்கும், குறைந்தது 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்லூரிகள் இரண்டிற்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்லூரிகளில் நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு: http://tndalu.ac.in