குழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல் | Kalvimalar - News

குழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்

எழுத்தின் அளவு :

ஒவ்வொரு பெற்றோருமே, தங்களின் குழந்தை, நல்ல நாகரீகமான மற்றும் நயமான பண்போடு, பணிவுள்ள ஒரு மனிதனாக வளர வேண்டும் என்றே விரும்புவர். இந்தப் பண்புகளை குழந்தைகளுக்கு கற்பிப்பது அத்தியாவசியமானது என்ற போதிலும், அது கடினமான ஒன்றும் கூட.

பண்பு நலன்களை கற்பித்தல்

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்பது போன்ற பழமொழிகள் சாதாரணமானவை அல்ல. எனவே, குழந்தைகளுக்கு மேற்கூறிய பண்புகளை இளம் வயதிலேயே கற்றுத்தர தொடங்க வேண்டும். அப்போதுதான் பெற்றோரின் பணி எளிதாக இருக்கும் மற்றும் நல்ல வெற்றியும் கிடைக்கும்.

தற்போதைய உலகமய சூழலில், தங்கள் பிள்ளைகளின் பண்புநலன் மேம்பாடு குறித்து, பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பாடுகிறார்கள் என்று சில தரப்பார் கூறுகின்றனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் தாக்கத்தினால், குழந்தைகள் எதிர்மறையாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலையும் பெற்றோர்களுக்கு உள்ளது.

குழந்தைகளுக்கு சிறந்த பண்பு நலன்களை கற்றுத்தரும் கடமையானது, பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அதில், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பங்குண்டு என்பதை மறத்தலாகாது. ஆசிரியர்களை, பல குழந்தைகள் தங்களின் முன்மாதிரி ஆளுமைகளாக எடுத்துக்கொள்கின்றன.

ஒரு நான்கு வயது குழந்தை, தனது தாயை விட, தனது ஆசிரியையின் செயல்களையே அதிகம் பின்பற்றுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில சமயங்களில், வீட்டு சூழலைவிட, வெளி சூழலில் நல்ல பண்புகள் கற்பிக்கப்படுகையில், குழந்தைகள் நன்கு கற்றுக்கொள்கின்றன.

பண்பு நலன்களை எவ்வாறு கற்றுக் கொடுப்பது?

தாங்கள், தங்களின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் பண்புகளை, முதலில் பெற்றோர்கள் பயிற்சிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தை பின்பற்ற ஆரம்பிக்கும். உதாரணமாக, எதையாவது கேட்கும்போது, "ப்ளீஸ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், எதையாவது பெறும்போது, "தாங்க்யூ" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர விரும்பினால், அந்தப் பண்புகளை முதலில் நீங்கள் தவறாமல் பின்பற்ற தொடங்க வேண்டும்.

நல்ல பண்புக்கூறுகள் என்பது, நடத்தைமுறை, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் ஆகிவற்றோடு தொடர்புடையது. இப்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.

ஒரு குழந்தை தனது நடத்தையில் சற்று வழுக்கினால், அதை நாம் கடுமையாக கையாளக் கூடாது. நம் குழந்தை ஒரு பொது இடத்தில் கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ நடந்துகொண்டு, அதன்மூலம் மற்றவர்கள் நம்மை கவனிக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த நேரத்தில், குழந்தை எதற்காக அவ்வாறு நடந்துகொண்டது என்பதை உணர்ந்து, குழந்தையை ஆறுதல் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி நினைத்து விடுவார்களே என்று எண்ணி, குழந்தையை தண்டிக்கக்கூடாது. குழந்தை ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டால், அதை நல்ல முறையில் பாராட்ட வேண்டும்.

குழந்தையிலேயே தொடங்குதல்

உங்களின் பிள்ளை, கைக் குழந்தையாக இருக்கும்போதே, அதற்கு நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் பணியைத் தொடங்கி விடலாம். உதாரணமாக, ஒருவரின் முகத்தையோ அல்லது முடியையோ பற்றி இழுக்கும்படி குழந்தைக்கு சொல்லித் தருவதற்கு பதில், குழந்தையிடம் சாதுவாகவும், மென்மையாகவும் பேசி அல்லது குழந்தையின் முன்பாக பிறரிடம் அவ்வாறு பேசினால், அந்தப் பண்பை குழந்தையும் கற்றுக் கொள்ளும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us