பாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்! | Kalvimalar - News

பாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்!

எழுத்தின் அளவு :

ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ஏதேனும் ஒரு திறனுடன்தான் பிறக்கின்றன. அந்த திறனை சரியாக அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட துறையில் சிறப்பாக மேம்படுத்தி, அக்குழந்தையின் வாழ்வை சிறப்படைய செய்வதே பெற்றோரின் பங்கு.

ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கும் ஒரு தனி வகையான படைப்புத்திறன் வெளிப்படும் வழிவகைகள் வித்தியாசமானவை. நாம் படைப்புத்திறனை, பழைய பாரம்பரிய முறைகளிலேயே அளவிடல் கூடாது. இன்றைய சூழல் என்பது வேறு. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், தாங்கள் வைத்து விளையாடும் பொம்மைகளுக்கு ஆடை அணிவித்தல் உள்ளிட்ட சிறிய செயல்களில்கூட, ஒரு குழந்தையின் படைப்புத் திறன் வெளிப்படுகிறது.

ஆட்டிஸம் மற்றும் படைப்புத்திறன்

இன்றைய நிலையில், பல குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், Autism என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், சமூகத் திறன்கள், தகவல் தொடர்பு, கண்கள் மூலமான தொடர்பு மற்றும் கவனச் சிதறல் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறான சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

இந்தக் குறைபாட்டால், ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல், கைகளை மேலும் கீழும் விரைவாக தேவையின்றி அசைத்துக் கொண்டிருத்தல் மற்றும் ஒருவரின் தலையில் சத்தம் வரும் வகையில் இடித்தல் உளிட்ட சமூகரீதியான நடத்தைப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

மேற்கூறிய பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, தியேட்டர் பயிற்சிகள் அதிக பயனைத் தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகை பயிற்சிகள், கண்ணாடி நியூரான்களை இயக்குகின்றன. (இந்த கண்ணாடி நியூரான்கள் என்பவை, மற்றவர்களோடு புரிந்துணர்வை ஏற்படுத்த துணைபுரிபவை). இதன்மூலம், பாதிக்கப்பட்ட ஒருவரின் சமூக மற்றும் படைப்புத்திறன்கள் மேம்படுகின்றன.

மேற்கூறிய குறைபாடு உள்ள குழந்தைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

படைப்பாளியாக இருத்தல்

படைப்பாக்கம் என்பது 3 அம்சங்களை உள்ளடக்கியது. உட்கிரகித்தல், பின்பற்றுதல் மற்றும் மதிநுட்பத்தை வெளிப்படுத்துதல் ஆகியவையே அந்த அம்சங்கள்.

உட்கிரகித்தல்

ஒரு படைப்புத்திறன் கொண்ட மூளையானது, ஒரு விஷயத்தை உட்கிரகிக்கிறது மற்றும் மறுபடைப்பாக்கம் செய்கிறது. உதாரணமாக, தன் தாயின் முகத்தைப் பார்க்கும் ஒரு குழந்தை, அந்த முகத்தில் சில கோடுகளை வரைந்து, தன் தாயின் முகத்தை ஒரு பேய் முகம்போல் மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. இது ஒரு படைப்புத்திறன் செயல்பாடு. உட்கிரகித்தல் என்பது படைப்புத்திறனுக்கு அடிப்படை.

பின்பற்றுதல்

இது அடுத்த நிலையைச் சேர்ந்தது. இந்த நிலையில், உங்களின் செயல்பாடு அல்லது அது அன்றாடம் சந்திக்கும் நபர்களின் செயல்பாடுகளைப் பார்த்து, அந்த செயல்களை தானே செய்ய முயற்சிக்கும். உதாரணமாக, நீங்கள் துணியை Iron செய்து கொண்டு இருப்பதைப் பார்த்தால், வேறு ஏதேனும் ஒரு பொருளை வைத்துக்கொண்டு, ஒரு துணியை எடுத்துக்கொண்டு, அதைப்போலவே செய்ய முயற்சிக்கும்.

மதிநுட்பத்தை வெளிப்படுத்துதல்

ஒவ்வொரு குழந்தையும் உட்கிரகித்து, பின்பற்றும் செயலை மேற்கொண்டாலும், சில குழந்தைகள் மட்டுமே, அத்தகைய அம்சங்களிலிருந்து புதியவற்றை, தனது படைப்புத் திறனின் மூலமாக உருவாக்க முயல்கின்றன.

விளையாட்டு நடவடிக்கைகள்

நரம்பியல் தொடர்பான, குறிப்பாக ஆட்டிஸம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு நடவடிக்கைகள், அவர்களின் மேம்பாட்டு செயல்பாட்டில் பெரிதும் துணைபுரிபவை.

அவர்களுக்கான விளையாட்டுக்களை நீங்கள் அறிமுகப்படுத்தும்போது, அனைத்து குழந்தைகளும் ஒத்துழைப்பர் என்று சொல்லிவிட முடியாது. அந்த விளையாட்டு முறை அவர்களுக்கு பிடிக்காதபோது, அந்த முறையை, அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றியமைத்து அவர்களை ஈடுபடுத்தலாம்.

ஒரு குறிப்பிட்ட விளையாட்டு, குழந்தைக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, பெற்றோர்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது. பலவிதமான விளையாட்டுக்களை முயற்சிசெய்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு புதுவிதமான விளையாட்டை அறிமுகம் செய்து, குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும். தினந்தோறும் விளையாடினால், 1 முதல் 2 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

தியேட்டர் விளையாட்டுக்கள்

குழந்தை மற்றும் பெற்றோர் ஆகிய இருவரும் பங்கேற்கும் வகையிலும், அதன்மூலம் குழந்தையின் படைப்புத்திறன் மற்றும் சமூகப் பண்புகளை மேம்படுத்தும் வகையிலும் உள்ள சில விளையாட்டுகள் பற்றிய விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டமிடாத விளையாட்டுக்கள்

பொருளை உருவகப்படுத்துதல்

இதுபோன்ற விளையாட்டுக்களில் பெற்றோரும், தங்கள் குழந்தையுடன் எளிதாக பங்கேற்கலாம். உதாரணமாக, ஒரு பேனாவை எடுத்துக்கொண்ட தந்தை, அதை ஒரு மைக்ரோபோனாக மாற்றிக்கொண்டு பாடுவது போல் செய்யலாம்.

தாயார் அதை வாங்கி, ஒரு கரண்டி போலவோ அல்லது சீப்பு போலவோ பயன்படுத்தலாம். அடுத்ததாக, குழந்தையை அந்தப் பேனாவை வித்தியாசமாக பயன்படுத்துமாறு ஊக்கப்படுத்தலாம். டெலஸ்கோப் போன்ற உபகரணம் மாதிரி அதை பயன்படுத்த ஐடியா கொடுக்கலாம்.

இத்தகைய விளையாட்டுகளின் மூலம், குழந்தைகளின் கற்பனைத்திறன் வளரும். இப்படியாக ஒரே பேனாவைக் கொண்டு, அதை குறைந்தபட்சம் 30 வகையான பொருட்களாக கற்பனை செய்யலாம்.

மனிதர்களை உருவகப்படுத்தல்

மேற்கண்ட விளையாட்டின் இன்னொரு அம்சம்தான் இந்த விளையாட்டு. உதாரணமாக, ஒரு பொருளை ஒரு அறிமுகமான நபராக உருவகப்படுத்தி, அந்த நபர் மாதிரி பேசி காண்பித்து, அது யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லலாம். மேலும், புராண அல்லது வரலாற்றுக் கதைகளில் வரும் பிரபல கதாபாத்திரங்களைப் பற்றிய சில விஷயங்களைக் கூறி, அது யாரென்று கண்டுபிடிக்க சொல்லலாம்.

மேலும், மிமிக்ரி செய்து அதை யார் என்று கண்டுபிடிக்கவும் சொல்லலாம். இதன்மூலம், குழந்தையின் பகுப்பாய்வு திறன் வளரும்.

செய்கைகள்

சைகைகள் மூலமாக விளையாடுவது, ஒரு சிறந்த உத்தியாகும். எளிமையான சைகைகளிலிருந்து, கடினமான சைகைகளுக்கு விளையாட்டின் போக்கை மெல்ல மெல்ல கொண்டு செல்லலாம்.

உதாரணமாக, உங்களின் இரு கைகளையும் விரித்து, அந்த இரண்டையும் பரஸ்பர எதிர் தோள்பட்டைகளில் மடக்கி வைப்பது எதைக் குறிக்கிறது என்று கேட்கவும். இதற்கான பதில் - கட்டிப்பிடித்தல்.

இதேபோன்று டாடா சொல்வது எப்படி, தூங்குவது எப்படி மற்றும் சாப்பிடுவது எப்படி உள்ளிட்ட பல்வேறு சைகைகளை செய்து காண்பித்து விளையாடலாம்.

மிருக சத்தங்கள்

மிருகங்களை பிடிக்காத குழந்தைகளே இல்லை எனலாம். நாய்கள், பூனைகள் முதல் புலிகள், சிங்கங்கள் வரை குழந்தைகள் விரும்புவர். எனவே, அவற்றை வைத்து பல்வேறான விளையாட்டுகளை விளையாடலாம்.

வெவ்வேறான விலங்குகளின் ஒலிகளை எழுப்பி, அது எந்த விலங்கு என்று கண்டுபிடிக்குமாறு கேட்கலாம். மேலும், ஒவ்வொரு விலங்கின் அசைவு தொடர்பாக செய்துகாட்டி அது எது என்று கண்டுபிடிக்குமாறு கேட்கலாம்.

விலங்குகளின் படங்களை வரைந்துகாட்டி, அதை கண்டுபிடிக்குமாறு கூறலாம் மற்றும் வெவ்வேறான மிருகங்களின் படங்களை வரைந்து, அவற்றுக்கு வண்ணமிடும்படி கேட்கலாம்.

வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் விளையாட்டு

இந்த வகை விளையாட்டில் உங்கள் குழந்தை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், சுதந்திரமாக விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, ஒரு ஓவியத்தில், வானத்திற்கு வண்ணம் தீட்டும்போது, நீல நிறத்தில்தான் தீட்ட வேண்டும் என்பது கட்டாயமல்ல. பச்சை நிறத்திலும் வண்ணம் தீட்ட அனுமதிக்கலாம்.

பல்வேறான ஓவியங்களைக் கொடுத்து, அவற்றுக்கு வண்ணம் தீட்ட வைக்கும் பயிற்சியில், ஒவ்வொரு பொருளுக்கும், குழந்தையின் விருப்பத்திற்கேற்ப வண்ணங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டும்.

வடிவங்களைப் பொறுத்தளவில், ஒரு வெள்ளைத் தாளில் இரு புள்ளிகளை தள்ளி தள்ளி வைத்து, அவற்றை இணைக்கச் சொல்லலாம். அப்போது ஒரு நேரான கோடு கிடைக்கும். அதேபோன்று நேராக இரண்டு புள்ளிகளை வைத்து, அவற்றின் நடுவில் மேலாக ஒரு புள்ளியை வைத்து, அவற்றை இணைக்கச் சொல்லலாம். இதன்மூலம் முக்கோண வடிவம் கிடைக்கும்.

இதுபோல் பலவிதங்களில் புள்ளிகளை இட்டு, அதன்மூலம் வடிவங்கள் உருவாக்குதலின் அடிப்படையை சொல்லி புரிய வைக்கலாம். இதனால், குழந்தையின் ஓவியம் வரையும் ஆற்றல் அதிகரிக்கும்.

குழந்தைக்கும், பெற்றோருக்கும் கிடைக்கும் நன்மைகள்

* இத்தகைய பயிற்சிகளின் மூலமாக, ஒரு குழந்தை தனது கவனிப்புத் திறனை அதிகரிக்கும் அதே வேளையில், அதன் சிந்தனைத் திறனும் விரிவடைகிறது.

* இவற்றின் மூலம் குழந்தையின் ஒப்பிடும் திறன் வளர்கிறது.

* இந்த பயிற்சிகள், குழந்தைகளின் மூளையில், Mirror neuron செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. Mirror neurons, மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு துணைபுரிகிறது. Imitation மற்றும் role - playing ஆகியவற்றின் மூலம் Mirror neuron -களை, மேற்கூறிய விளையாட்டுக்கள் தட்டி எழுப்புகின்றன.

* ஆட்டிஸம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளிடம், பெற்றோர்கள், இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுகையில், அவர்கள் இருவருக்கும் இடையிலான பந்தம் அதிகரிக்கிறது.

* மேலும், மனதிற்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் இத்தகைய விளையாட்டுகளால் பெற்றோர்கள் பெறுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்களின் இழந்துவிட்ட குழந்தைப் பருவ அனுபவத்தை மீண்டும் பெறுகிறார்கள்.

* ஒவ்வொரு விளையாட்டும், கண் தொடர்பு, எளிய தகவல் தொடர்பு மற்றும் குழு விளையாட்டு மற்றும் உணர்வு புரிதல் உள்ளிட்ட தனித்தனி விஷயங்களின் மீது கவனம் செலுத்துகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us