கம்ப்யூட்டரையும் அது தொடர்பான இதர அமைப்புகளையும் ஒயர்களின் உதவியின்றி ரேடியோ அலைவரிசை மற்றும் அலைகள் மூலமாக இணைப்பதை ஒயர்லெஸ் என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில் இத்துறையில் ஏற்பட்டு வரும் நவீன மற்றும் அசுர வளர்ச்சியின் காரணமாக இத்துறையில் பெரிய வளர்ச்சியும் அதிக வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
இன்று நாம் பலரும் அறியும் புளூடூத் டெக்னாலஜி, ஒயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆகியவை இத்துறைக்கு உதாரணங்கள். நாள்தோறும் உருவாகும் புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக ஒயர்லெஸ் டெக்னாலஜி படித்தவருக்கு சிறப்பான வாய்ப்புகள் கனிந்து கிடைக்கின்றன.
ஒயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க் (WLAN):
ஒரு கம்ப்யூட்டரையும் சர்வரையும் இவற்றை பயன்படுத்துபவரின் கம்ப்யூட்டர்களையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒயர்லெஸ் தொழில்நுட்பத்தின் உதவியோடு கேபிள்கள் இன்றி இணைப்பதை டபிள்யூ.எல்.ஏ.என். எனக் கூறுகிறார்கள். இதில் மின்காந்தக் கதிர், ரேடியோ அலை போன்றவை மூலமாக ஸ்பிரெட்-ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பம் மூலமாக தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. டபிள்யூ.எல்.ஏ.என்னானது இன்பிராஸ்டிரக்சர் மற்றும் இண்டிபெண்டன்ட் என 2 பிரிவுகளாக இருக்கிறது. இன்ப்ராஸ்டிரக்சர் டபிள்யூ.எல்.ஏ.என். முறையில் ஒயர்லெஸ் அமைப்பானது ஒயர்களுடன் தொடர்புடைய அமைப்பில் இணைக்கப்படுகிறது. இதுவே இன்று அதிக பட்ச பயன்பாட்டில் உள்ளது. ஒயர்லெஸ் பிடலிடி எனப்படும் WiFiயும் டபிள்யூ.எல்.ஏ.என்னின் ஒரு பிரிவு தான்.
ஒயர்லெஸ் வைட் ஏரியா நெட்வொர்க் (WWAN):
ஒரு கம்ப்யூட்டர் சர்வரையும் பயன்படுத்துபவரின் கம்ப்யூட்டர்களையும் அவற்றின் எல்லைகள் பற்றிய வரையறைகளுடன் ரேடியோ, செயற்கைக் கோள்கள், மொபைல் போன் டெக்னாலஜி வழியாக கேபிள்கள் இன்றி இணைப்பதே ஒயர்லெஸ் வைட் ஏரியா நெட்வொர்க்காகும். செயற்கைக் கோள்கள், ஆன்டெனாக்கள் மூலமாக வெவ்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ளவர்களும் இந்த முறையில் இணைப்புப் பெறுகிறார்கள்.
ஒயர்லெஸ் படிப்புகளை பிளஸ் 2 முடித்தவர்கள் படிக்கலாம். பிளஸ் 2 முடித்தபின் படிப்பதே அறிவுறுத்தப்படுகிறது. இப்படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் இந்தியாவிலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் இதைப் படிக்கலாம். ஒயர்லெஸ் டெக்னாலஜியில் சிறப்புப் படிப்பு படிப்பவர்கள் WiFi, இன்பிராரெட், புளூடூத், ஆர்.எப்.ஐ.டி., வீ-மேக்ஸ், சிக்பீ பிரிவுகளில் முழுமையாகத் திறன் பெறுவது அவசியம்.
இந்தியாவில் ஒயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பிளானட் 3 கல்வி நிறுவனமானது ஒயர்லெஸ் இன் சி.டபிள்யூ.என்.ஏ., சி.டபிள்யூ.ஏ.பி., சி.டபிள்யூ.என்.ஈ., சி. டபிள்யூ.
என்.டி. போன்ற பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகளைத் தருகிறது. இன்றைய ஒயர்லெஸ் தொழில் நுட்பத் துறையிலுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் கற்றுத் தரப்படுகிறது. எதிர்கால நிறுவனங்களில் ஒயர்லெஸ் தொழில்நுட்பமே அதிக பயன்பாட்டில் இருக்கும் என்பதால் தகுதிக்கேற்ப இந்த சான்றிதழ் படிப்புகளில் ஒன்றைப் படிப்பது அறிவுறுத்தப்படுகிறது.
ஒயர்லெஸ் லான் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அனுபவம் போன்றவற்றைப் பெற்றவர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள நிறுவனங்கள் விழைகின்றன. சில நிறுவனங்கள் இத் தொழில் நுட்பம் அறிந்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்துகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் நெட் வொர்க் இன்பிராஸ்டிரக்சர் சிறப்புத் திறனாளர்கள் மற்றும் ஒயர்லெஸ் லான் திறனாளர்களை பணிக்கு எடுத்துக் கொள்கின்றன. பணியில் சேர்ந்தவுடன் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை சம்பளம் பெற முடிகிறது. அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் அதிகரிப்பதும் சாதாரணம் தான்.
சென்னையிலுள்ள ஒனிக்ஸ் அகாடமி மற்றும் மும்பையிலுள்ள சி.எம்.எஸ். கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் ஆகியவை துறையின் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களாகும்.