தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (9ம் தேதி) வெளியிடப்பட்டன.
சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (9ம் தேதி) வெளியிடப்பட்டன. பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 195 மாணவ, மாணவியர் எழுதியதில், 4 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 3.4 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 84.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 81.3 சதவீதம் மாணவர்களும், 87.3 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதியவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 733 மாணவர்களும், 2 லட்சத்து 96 ஆயிரத்து 761 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3 லட்சத்து 60 ஆயிரத்து 722 பேர் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் திருச்செங்கோடு வித்யவிகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி மற்றும் செங்கல்பட்டு புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளி மாணவர் ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் தலா 1182 மதிப் பெண்கள் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.
அதேபோல், ஈரோடு கே.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யா மற்றும் நாமக்கல் மாவட்டம் கூரம்பட்டி வித்யவிகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் குமாரவிக்ரம் ஆகிய இருவரும் தலா 1181 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
பிறமொழி பாடங்களை முதல் பாடமாக எடுத்தவர்களில், சென்னை அண்ணாநகர் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் பிரெஞ்சு பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்துள்ளார். சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர் முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர் ஹரீஷ்ஸ்ரீராம் 1187 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.