பிளஸ் 2ல் கணிதம், அறிவியல் படித்து வரும் நான் பொதுவாக இன்றைய மனப்போக்கான சாப்ட்வேர் துறையைத் தவிர்த்து சி.ஏ., படிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன? ஜனவரி 17,2011,00:00 IST
மிக ஆரோக்கியமான சிந்தனை இது. சாப்ட்வேர் துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சியானது பெரும்பான்மையான மாணவர்களை மட்டுமல்லாது, பெற்றோரையும் அதன்பால் ஈர்ப்பது உண்மை தான். சிறப்பான சம்பளம், நல்ல பணிச் சூழல் போன்ற எத்தனையோ காரணங்களால் சாப்ட்வேர் துறையை பெரும்பாலானோர் நாடுகின்றனர். ஆனாலும் அனைவருமே சாப்ட்வேர் துறையில் பணி புரிய வேண்டுமென்றால் அது சாத்தியமில்லை அல்லவா? எனவே உங்களது முடிவு சரியானது தான்.
பிளஸ் 2ல் கணிதமும் அறிவியலும் படித்திடும் நீங்கள், அதை முடித்தபின் சி.ஏ., படிக்க நினைத்தால் அதற்கான நுழைவுத் தேர்வு எழுதி அதில் வெற்றிபெற வேண்டும். மதுரை போன்ற டயர் 2 நகரங்களிலும் கூட இன்று இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
நடத்தப்படுகின்றன. ஆனால் சென்னை போன்ற மாநகரங்களில் தான் இதற்கான சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் சேர்ந்து இந்தத் தேர்வுக்காக சில மாதங்கள் தயாரானால் போதும். கட்டாயம் வெற்றி பெறலாம். மேலும் பிளஸ் 2 வரை கணிதப் பின்புலம் இருப்பதால் எதிர்காலத்தில் சி.ஏ., தொழிலுடன் கூடிய கணிதத் தேவைகளையும் நீங்கள் எளிதாக சந்தித்துக் கொள்ளலாம். எனவே தைரியமாக உங்களது இலக்கில் பயணிக்கலாம்.