மீடியாத் துறையைத் தேர்வு செய்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றது என எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஷ் பேசினார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் மீடியா துறையில் பெருகி வரும் வேலை வாய்ப்புகள் குறித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஷ் பேசியதாவது : மீடியாத்துறைக்கு (ஊடகத்துறை) வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது.
குறிப்பாக டிவி, ரேடியோ, விளம்பரத்துறை, சினிமாத்துறை, நாளிதழ்களில் என அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. தற்போது எல்லா துறைகளிலும் ஊடகங்கள் செல்வாக்கு பெற்றுள்ளது. ஒரு சம்பவம் நடந்தால் வழக்கமாக நாம் அடுத்த நாள்தான் பேப்பரில் பார்க்க முடியும். ஆனால் தற்போது அன்றைய தினம் இரவே இணைய தளத்தில் பார்த்துவிட முடியும். அந்த அளவிற்கு ஊடகத்துறை வளர்ந்துவிட்டது.
மீடியா துறையில் இதழியல் படிப்பு, எலக்ட்ரானிக் மீடியா என பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. இதே போல் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. இதனால் இந்த படிப்பு படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது. சினிமாத்துறை தொடர்பான டிப்ளமோ இன் பிலிம் டெக்னாலாஜி, பிலிம் டெக்னாலாஜி பட்டயப்படிப்பிற்கும் எதிர்காலம் உள்ளது.
மீடியாத்துறையில் கிராபிக் டிசைன், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், போட்டோகிராபி, அனிமேஷன் ஆகியவற்றில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.மீடியாத் துறையைத் தேர்வு செய்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. மற்ற துறைகளை விட ஊடகத்துறை நாளுக்கு நாள் அதிக அளவு வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. 2015ம் ஆண்டில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் ஊடகத்துறை மூலம்தான் கிடைக்கும். இவ்வாறு ராஜேஷ் பேசினார்.