தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது, என டி.சி.எஸ். நிறுவன அதிகாரி சுமந்த்ராமன் கூறினார்.
புதுச்சேரியில் தினமலர் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில், "கம்ப்யூட்டர் ஐ.டி., துறையின் தற்போதைய போக்குகள்" என்ற தலைப்பில் டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி சுமந்த்ராமன் பேசியதாவது:இன்றைய நிலையில், எந்தத் துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.டி.,) உதவியின்றி இயங்க முடியாது என்ற நிலை உள்ளது.
உலகின் மிகப் பெரும் தொழில்களில் ஒன்றாக தகவல் ஐ.டி. துறை விளங்குகிறது. உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இத்துறையில் புழங்குகிறது. இத்துறையில் வேலை வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
2010ல் வளர்ச்சி அதிகரித்தது. அடுத்து வரும் ஆண்டுகளில் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகும். இன்ஜினியரிங் படிப்பில் எந்தப் பிரிவு படித்தாலும் ஐ.டி., துறைக்கு வர முடியும். பி.எஸ்சி., படித்தவர்கள் கூட இத்துறைக்கு வரலாம். அரசின் சேவைகளை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வழங்க உள்ளதால், இத்துறையில் வேலை வாய்ப்புகள் பெருகும்.
பேச்சுத்திறன், வெளிப்படுத்தும் ஆற்றல், பாசிடிவ் எண்ணம் ஆகிய மூன்றும், ஐ.டி., துறையில் சேர்வதற்கு அடிப்படை தேவைகளாகும். இத்துறையில் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் சேர்பவர்கள், அனுபவத்தின் அடிப்படையில் மாதம் ரூ.ஒரு லட்சம் வருமானம் பெறும் வாய்ப்புள்ளது. ஐ.டி., துறையைப் பொறுத்தவரை, காலம், கடின உழைப்பு, முடியும் என்ற மனப்பான்மை ஆகிய மூன்றும் மிக முக்கியம். ஐ.டி., துறையில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இவ்வாறு சுமந்த்ராமன் பேசினார்.