உங்களது கடிதத்திலிருந்து உங்களதுசகோதரி பி.எஸ்சி., ஐ.டி., படித்து வருவதை அறிகிறோம். 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர்கள் தங்களது எதிர்கால வேலை பற்றி யோசிப்பது ஆரோக்கியமானது. ஆனால் தேவையற்ற குழப்பங்களை விலக்க வேண்டும்.
ஐ.டி., பட்டப்படிப்பில் சராசரியாக படித்து வரும் எவரும் இதே போலவே படிப்பை முடித்தால் அவர்களுக்கு துறை சார்ந்த நல்ல வேலை கிடைப்பது மிகக் கடினம். உங்களது. சகோதரியைப் போலவே எண்ணற்ற மாணவர்களும் மாணவிகளும் அதைவிட முக்கியமாக அவர்களது பெற்றோரும் நல்ல படிப்பில் சேர்ந்தாலே போதும், நல்ல வேலை கிடைத்து விடும் என்று நம்பிவிடுகிறார்கள்.
உங்களது சகோதரியை எடுத்துக் கொள்வோம். 2ம் ஆண்டில் படித்தாலும் எதிர்கால வேலைக்காக அவர் இதுவரை திறன்கள் எதையும் வளர்த்துக் கொள்ளவில்லை. ஐ.டி., துறையில் இன்ஜினியரிங் மட்டுமல்லாது பல படிப்புகளைப் படித்தவருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன தான் என்றாலும் பி.எஸ்சி., ஐ.டி., படித்தவருக்கு அடிப்படைப் பணி வாய்ப்புகளே கிடைக்கின்றன.
நல்ல வேலை பெற வேண்டுமென்றால் தகுதிகளை மேம்படுத்திக் கொள்வதை விட ஐ.டி., சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். டொமைன் திறன்கள் தவிர ஆங்கில தகவல் தொடர்புத் திறன், பழகும் திறன், தலைமைப் பண்பு போன்ற மென்திறன்களையும் ஒருவர் பெற வேண்டும். இவை அனைத்தையும் பெற்றால் தான் எவரும் அவரது துறையில் நல்ல வேலை பெற முடியும்.
இதற்கு மாறாக அவர் போட்டித் தேர்வுகள் எழுதி வேலை பெற விரும்பினால் அதற்கேற்ற முயற்சிகளைத் தொடங்க வேண்டியதும் இப்போது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கும் மென்திறன்கள் அவசியம் தான். எனவே பட்டப்படிப்பு படிக்கும் வரை வெறும் படிப்பே போதும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம்.