வளர்ந்து வரும் அறிவியில் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களது திறமைகளை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை கூறினார்.
திருவண்ணாமலை கம்பன் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை கலந்து கொண்டு 217 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை பேசியதாவது: வாழ்க்கைக்கு கல்வி அவசியம் அதை கல்லூரியில் நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆனால், வாழ்க்கை கல்வி என்பதனை நீங்கள் கற்க வேண்டும். அது அனுபவ கல்வி அதனை பணிபுரியும் இடத்திலும், சமுதாய பிரச்னைகளை சந்திக்கும்போதும், நீங்கள் பெற முடியும்.
இன்று பெறுகின்ற கல்வி ஐந்தாண்டுக்கு பின் அதனுடைய பரிணாம வளர்ச்சி முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்றாடம் உலகளவில் ஏற்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உங்களின் திறøமையை வளர்த்து கொள்ள வேண்டும். இளைஞர்களாகிய உங்களுக்கு எதிர்காலம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் வாய்ப்புள்ளது அதற்குரிய தகுதியை நீங்கள் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் இயற்கை சீற்றத்தினாலும் மேலும் பல காரணங்களாலும் பெரிய அளவு அழிவு ஏற்படுகிறது. ஆனாலும், ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் வளர்ச்சியடைந்து உலகளவில் தலை சிறந்த நாடுகளுடன் போட்டியிடுகிறது, அதற்கு காரணம் அவர்களின் மனித வள மேம்பாடு. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பொறியியல் வல்லுநர்களாகிய நீங்கள் கடினமாக உழைத்து உங்களையும் அதன் மூலம் நம் தாய்த்திருநாட்டையும் மேம்படுத்த வேண்டும் உங்கள் பெற்றோர்களக்கும், படித்த கல்லூரிகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார்.