பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவத் துறை சார்ந்த கல்விப் பிரிவுகள் அனைத்துமே வேலை வாய்ப்புச் சந்தையில் அதிக டிமாண்ட் உள்ளவை என கல்வியாளர் யோகானந்த சிவம் தெரிவிக்கிறார்.
மேலும் அப்பாடபிரிவு குறித்து அவர் கூறுகையில், டிப்ளமா இன் மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜி படிப்பிற்கு சமீபத்திய ஆண்டுகளாக எதிர்பார்ப்பு கூடியுள்ளது. காரணம், வளரும் சிறு ஊர்களிலும், பெருகி வரும் மருத்துவமனைகள் மற்றும் அதையொட்டிய மருத்துவ ஆய்வுக் கூடங்கள் தான் காரணம்.
இன்னொரு பக்கம், இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே 21 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் அரசு வேலை கிடைப்பது தான். இந்தப் படிப்பை மேற்கொள்ள பெரிய அளவில் கல்வித் தகுதியோ, கல்விக் கட்டணமோ ஆகப் போவதில்லை.
பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியலுடன் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் படித்தவர்களும், லேப் டெக்னாலஜி பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் சேர போட்டி அதிகம் என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
மேலும், அரசு மருத்துவமனைகள் தோறும் பெருமளவு மருத்துவத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், தேர்வு முடிவுகள் வந்ததும் அரசுப் பணி தேடி வரும். இந்தத் துறையில் உள்ள வேலை வாய்ப்பை குறி வைத்து ஏராளமான தனியார் நிறுவனங்கள், "கல்வித் தகுதி பொருட்டல்ல என்று கட்டணக் கொள்ளை ஆசையில், மாணவர்களை சேர்த்து வருகின்றன. இந்த நிலையங்களில் சேர்ந்து படித்தால், சுமாரான வேலை கிடைக்கும் என்றாலும், அது அரசு வேலையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, டி.எம்.எல்.டி., படிப்பதற்கான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன், கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம், அனுமதி உள்ளிட்ட தகுதிகளை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.