பி.எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழக தலைவர் அப்துல் காதீர் ஏ. ரகுமான் புஹாரி அளித்த பேட்டி:
மாணவர்களை ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சி படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தின் சிறப்பாக, எண்ணற்ற அம்சங்கள் இருந்தாலும், மிகவும் பெருமை தரக்கூடிய அம்சமாக இருப்பது நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலையை அடைந்த முதல் 5 வருடத்திலேயே நாக் அங்கீகாரத்தை பெற்றதுதான். இந்த வருடமும் நாக் அங்கீகாரத்தை சிறப்பான முறையில் தக்க வைத்துக் கொண்டிருப்பது பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் கல்வி அளிக்கும் நிலைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.
மானவர்களுக்கு போதுமான சுதந்திரத்தை அளிப்பதோடு, கட்டுப்பாடான வாழக்கை முறையினையும் கல்வி கற்கும் காலத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் திறமையானவராக உருவாக வேண்டும் என்றால் பாடத்திட்டத்தோடு ஆசிரியரின் பங்களிப்பும் மிகவும் அவசியம். எனவே ஆராய்ச்சித் திறன்வாய்ந்த ஆசிரியர்களைக்கொண்டு மட்டுமே கல்வி அளிக்கிறோம். பணியாற்றும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு என சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. குறிப்பாக வாழ்வியல் அறிவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளை ஆற்றியிருக்கிறார்கள்.
ஆராய்ச்சித் துறையை ஊக்குவிக்கும் விதமாகவும், மாணவர்கள் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பணித்திறன்மிக்கவர்களாக மாணவர்கள் கல்வி நிறுவனத்தை விட்டு செல்ல வேண்டும் என்பதால் போர்டு, இன்போசிஸ், ஐ.பி.எம். போன்ற பெருந்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைகளோடு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்திய நிறுவனங்களில் மட்டுமல்லாது, வெளிநாட்டு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதால் மாணவர்களின் விருப்பத்திற்குரிய பல்கலைக்கழகமாக விளங்குகிறது.
மாணவர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தும் வகையில் ரோட்டராக்ட் கிளப், என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் இணைந்து செயல்பட மாணவர்களை உற்சாகப்படுத்துவதோடு, உடல் நலம் காக்க விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் போட்டிகளுக்கும், மாணவர்களின் தலைமைப் பண்பினை வளர்ப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தை பசுமை சூழ்ந்த வளாகமாக ஏற்படுத்தி இருப்பதோடு, எதிர்கால திட்டங்களும், கட்டட அமைப்புகளும் இயற்கையோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிடப்பட்டு வருகிறது.