சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவன தலைவர் ஸ்ரீராம் அளித்த பேட்டி:
தரமான தொழிற்கல்வியுடன், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகளை வளர்த்து புரொபஷனல்களை பொறியியல் கல்லூரிகள் உருவாக்கவேண்டும். அதன்படி, கல்லூரிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்குமான இடைவெளியை போக்கி, வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை மாணவர்களிடம் வளர்ப்பதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம்.
ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபராக, இன்றைய பொறியியல் பட்டதாரிகளிடம் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளை நன்கு அறிவேன். எனவே, மாணவர்கள் அத்தகைய தகுதிகளை பெறும் வகையில் உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், சிறந்த பயிற்சி அளிப்பதும் சாத்தியமாகிறது.
பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து, கல்லூரிக்கு வரும் புதிய மாணவர்களுக்கு ஒரு வார காலம் ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ வழங்குகிறோம். அதன்பின்னர் முதலாமாண்டு வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் தயக்கத்தைவிட்டு, புத்துணர்வுடன் கல்வி கற்க தயாராகின்றனர். இரண்டாம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் தொழில் வல்லூநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடத்தப்படுகிறது.
மாணவர்களின் ஆர்வம், திறமையை அறிந்து, அவர்களுக்கான துறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் துறை சார்ந்த ‘இன்டஸ்டிரியல் விசிட்’ மற்றும் ‘இன்டர்ன் ஷிப்’ மாணவர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. கல்லூரிப் படிப்பிற்கு பிறகு வேலை பெறுவதும் எளிதாகிறது.
மொபிலிட்டி, மெட்ராலஜி, ரோபோட்டிக்ஸ், மெக்கானிக்கல், ஸ்கில் டெவலப்மென்ட், கட்டிங் டூல்ஸ் ஆகிய பிரிவுகளில் செயல்படும் ‘சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ்’ சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தனித்துவம் என்றும் சொல்லலாம். குறிப்பாக, கூகா நிறுவனத்திடன் இணைந்து ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக ‘ரோபோடிக்ஸ்’ ஒர்க்சாப் நடத்தப்படுகிறது. தொழில் நிறுவனங்களின் தேவையை உணர்ந்து, துவக்கப்பட்ட ‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்பு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் சேர மாணவியரிடையே தயக்கம் நிலவுகிறது. நின்று கொண்டே இயந்திரத்துடன் வேலை செய்யவேண்டும் என்ற தவறான எண்ணம் நிலவுகிறது. ஆனால், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மாணவிகள் செய்யக்கூடிய டிசைனிங் உட்பட எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் பெண்கள் அதிகளவில் சேர்ந்து படிக்க ஊக்குவிக்கிறோம்.
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், பல்வேறு வெளிநாட்டு மொழிகள், லீடர்சிப் ஸ்கில் மேம்பாட்டிற்கான பயிற்சி உட்பட வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை வளர்க்கும் ஏராளமான பயிற்சிகளிலும் அதிக கவனம் செலுத்துகிறோம். கல்லூரிப் படிப்பின்போதே தேவையான அனைத்து தகுதிகளையும் வளர்த்து, மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். இளைஞர்கள் தொழில்முனைவோராக சமுதாயத்தில் சாதிக்கவும் ஊக்குவிக்கிறோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகள் 30 பேருக்கு ஆண்டுதோறும் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு விடுதி, உணவு, புத்தகம் அனைத்தும் கட்டணமின்றி வழங்குகிறோம். உள்ளூர் மாணவராக இருந்தால் கல்லூரி பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் இல்லை.