தொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு தொடர்புடைய படிப்பாக கருதப்பட்டது சமூகவியல். ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப் பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு போன்றவற்றுக்கு இன்று பெரும் பங்காற்றும் துறையாக விளங்க உதவுவது சமூகவியல் தான்.
இதில் பங்காற்றும் ஒருவருக்குக் கிடைக்கும் திருப்தியானது மிக அதிகமாக இருக்கிறது. மனிதர்களை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை மேற்கொள்ளலாம். பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும் என்பதை நாம் அறியும் போது அது எவ்வளவு பெரிய திருப்தியைத் தரும்?
சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை களைய முயற்சிப்பதே சமூகவியலாளர்களின் முக்கியப் பணியாக இருக்கிறது. இதற்கு கவுன்சலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, உடல்நல திட்டங்களை செயல்படுத்துவது என இவர்களின் பணி எப்போதும் உயரிய நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதை நாம் காணலாம்.
சமூகவியல் பணிகளில் கிளினிகல் சமூகப் பணி, பள்ளி சமூகப் பணி, உளவியல் சமூகப் பணி, மறுசீரமைப்பு மற்றும் குற்றங்களை களையும் பணி, மருத்துவ சமூகப் பணி, சமுதாயப் பணி என பல்வேறு பிரிவுகள் உள்ளன. தொழிற்சாலை சமுதாயப் பணியும் இருக்கிறது. அரசுத் துறைகளிலும் தன்னார்வ நிறுவனங்களிலும் இதைப் படித்தவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எம்.எஸ்.டபிள்யூ., அல்லது எம்.ஏ., படிப்பாக இதைப் படிக்கலாம். யுனெஸ்கோ, யுனிசெப், லேபர் பீரோ போன்றவற்றில் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.