தூத்துக்குடியைச் சேர்ந்த மத்திய அரசு அலுவலர் பிரசன்ன வெங்கடேஷ், ஐ.ஏ.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில், 123வது இடத்தையும், தமிழக அளவில் ஆறாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வெங்கட்ராமன் மகன் பிரசன்ன வெங்கடேஷ், 23. இவர், தூத்துக்குடியில், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தாவர தொற்று நோய் தடுப்பு மையத்தில், உதவி பயிர்ப் பாதுகாப்பு அலுவலராக உள்ளார்.
கடந்த, 2005 முதல் 2009 வரை, கோவை வேளாண் பல்கலையில் பி.எஸ்சி., வேளாண்மை படித்தார். ஸ்டெப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்று, 2011 செப்டம்பரில் இப்பணிக்கு வந்தார். முன்னதாக, 2010ல், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதிய பிரசன்ன வெங்கடேஷ் தேர்ச்சி பெறவில்லை. கடந்தாண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்.
இவர், இத்தேர்வில் அகில இந்திய அளவில், 123வது இடத்தையும், தமிழக அளவில் ஆறாம் இடத்தையும் பிடித்துள்ளார். பிரசன்ன வெங்கடேஷ் கூறும்போது, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, சரியான திட்டமிடல் இருந்தால் யாரும், எதையும் சாதிக்கலாம். சென்னை பயிற்சி மையத்தில் படித்தேன்.
பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்த நான், ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினேன். எனக்கு தென்னிந்தியாவில் பணி ஒதுக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன் என்றார். ஐ.ஏ.எஸ்., மெயின் தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், இவரது அம்மா மஞ்சுளா இறந்து போனார். ஆனால், அந்த துக்கத்திலும் தேர்வு எழுதி இவர் வெற்றி பெற்றுள்ளார்.