மாநில அளவில் தமிழில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம் பிடித்த மாணவி, மருத்துவம் படித்து ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறினார். திருத்தணி அரசு மகளிர் மேனிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி, தமிழ் மொழி பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் பாட வாரியாக எடுத்த மதிப்பெண்கள், தமிழ்-100, ஆங்கிலம்-95, கணிதம்-88, அறிவியல்-95, சமூக அறிவியல்-98 என மொத்தம், 476 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவி புவனேஸ்வரி கூறும்போது, "தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்க, என்னுடைய தமிழ் ஆசிரியர் திருவருட்செல்வன் காரணம். தமிழில் எப்படி பிழை இல்லாமல் எழுதுவது, இலக்கணத்தில் முழு மதிப்பெண்கள் எப்படி பெறுவது உள்ளிட்ட பல நுணுக்கமான ஆலோசனைகள் வழங்கினார்.
எனது பெற்றோர் எத்திராஜூலு, கவிதா மற்றும் சகோதரிகளும் எனக்கு ஊக்கம் அளித்தனர். நான் மேனிலைக் கல்வியில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்து, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் இடம் பிடித்து, டாக்டராக படித்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதே என் லட்சியம்" என்றார். மாநில அளவில் தமிழில் மூன்றாம் இடமும், பள்ளியில் முதலிடத்தையும் பிடித்த புவனேஸ்வரியை வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.