"எப்போதுமே, டிவி பார்க்க மாட்டேன்,' என, எஸ்.எஸ்.எல்.சி., பாடத்தில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற ஈரோடு மாணவி சுவாதி கூறினார். ஈரோடு, திண்டல் பி.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதி, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 496 மார்க் எடுத்து, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
பாட வாரியாக, தமிழ் - 99, ஆங்கிலம் - 98, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 99. மொத்த மதிப்பெண் - 496. இவரது தந்தை சென்னியப்பன், ஈரோடில் காது, மூக்கு, தொண்டை நிபுணராக உள்ளார். அம்மா சாந்தி குடும்பத்தலைவி.
மாணவி கூறியதாவது: என் பள்ளி ஆசிரியர்கள் படிக்க நல்ல ஊக்கம் தந்தனர். எப்போதுமே நான், டிவி பார்க்க மாட்டேன். புத்தகம் படிப்பது, படங்கள் வரைவது மட்டுமே என் பொழுதுபோக்கு. ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை தினமும் படிப்பேன். தினமும் படிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொண்டேன். மேல்படிப்பாக மருத்துவத் துறையில், எனது தந்தையை போலவே காது, மூக்கு, தொண்டை டாக்டராவதுதான் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.