தமிழ் அல்லாத பிறமொழிப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படித்ததில், சென்னை வேப்பேரியைச் சேர்ந்த மாணவி மிதிஷா சுரானா, 500க்கு 497 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். மாணவியின் தந்தை ஹத்தோ சுரானா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். தாய் ரேகா சுரானா.
முதலிடம் பிடித்தது குறித்து மாணவி மிதிஷா சுரானா கூறியதாவது: மகிழ்ச்சியில் திக்குமுக்காடி நிற்கிறேன். நான், முதலிடம் பிடிப்பேன் என தெரியும். 500க்கு 500 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்தேன். 497 தான் கிடைத்துள்ளது. இருந்தாலும் இது, எனக்கு மிகவும் மிகழ்ச்சி அளிக்கிறது.
நான் இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் படித்து வருகிறேன். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த, பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, எனது பெற்றோர், பள்ளி ஆசிரியை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் பொறியியல் படித்து இஞ்ஜினியராக விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.