எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த, தஞ்சை பொன்னையா ராமஜெயம் பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத், "எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போல விஞ்ஞானியாக ஆக வேண்டும்,' என்றார்.
தஞ்சை ராமசாமி நகரிலுள்ள பொன்னையா ராமஜெயம் பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத், 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீநாத் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ் - 97, ஆங்கிலம் - 100, அறிவியல் - 100, கணிதம் - 100, சமூக அறிவியல் - 100. தஞ்சை அண்ணாமலை நகர், மூன்றாவது கிராஸ், வெஸ்ட் எக்ஸ்டன்சனில் மாணவர் ஸ்ரீநாத் வசிக்கிறார். இவருடைய தந்தை பிரகாஷ், தாய் விஜயலட்சுமி. தந்தை, மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அண்ணன் வெங்கட் பிரசன்னா, தஞ்சை கிங்ஸ் கல்லூரியில் பி.டெக்., இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
அக்கறை: மாநிலத்தில் முதலிடம் பிடித்தது குறித்து ஸ்ரீநாத் கூறியதாவது: நான், எட்டாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் படித்து வருகிறேன். பள்ளியில் துவக்கத்திலிருந்தே எனக்கு முதலிடம் பெறுவதற்கான வழிமுறைகளை கற்றுக் கொடுத்தனர். அதிக மதிப்பெண் பெறுவதற்கான திறமை பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து, கூடுதல் அக்கறை செலுத்தி படிக்க வைத்தனர். அதே சமயத்தில், பாடங்களைத் திணிக்காமல் விருப்பப்பட்டபோது படிக்க அறிவுறுத்தினர்.
அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்தேன். ஆசிரியர்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றினேன். அதனால் தான் மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்க முடிந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் இந்த சாதனையை படைக்க முடிந்தது. அவர்களுக்கு எனது நன்றி, என்றார்.