கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்! | Kalvimalar - News

கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்!பிப்ரவரி 28,2022,22:21 IST

எழுத்தின் அளவு :

கொரோனா காலங்களில் நாம் பெரும் சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவற்றை சாதகமான வாய்ப்புகளாகத்தான் நான் பார்க்கிறேன். குறிப்பாக, இன்ஜினியரிங் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, ஏராளமான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.



கொரோனாவால் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களில் டிஜிட்டல் கல்வி முறையும் ஒன்று. டிஜிட்டல் வழிக் கல்வியை விரைவில் நாம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டோம். இல்லையென்றால், இந்தநிலையை எட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும். கொரோனாவால் கல்வி கற்றல் திறன் நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், ஆன்லைன் வாயிலான டிஜிட்டல் கல்வி முறையை மாணவர்களும் சரி, பேராசிரியர்களும் சரி மிக விரைவாக பழகிவிட்டனர். 



நூலகம் மற்றும் ஆய்வகங்களை பயன்படுத்துதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றல், இன்டர்ன்ஷிப், இண்டஸ்ட்ரியல் விசிட் ஆகியவற்றை மாணவர்கள் தவறவிடும் நிலை ஏற்பட்டது. அந்த சூழலில், விர்ச்சுவல் ஆய்வகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனினும், வகுப்பறைக் கல்வி முறைக்கு ஆன்லைன் வழிக் கல்வி சரியான மாற்றாக அமைய வாய்ப்பில்லை. நண்பர்களுடன் கலந்து பேசி கற்கும் முறையை மாணவர்கள் மிக மகிழ்ச்சிகரமானது. 



தற்போது கல்லூரிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ள நிலையில், தவறவிட்ட அனைத்தையும் மீண்டும் பெறும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கல்வி நிறுவனங்களும் ஊக்கப்படுத்தி தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர முனைப்பு காட்டுகின்றன. வரும் காலங்களில், கல்வி கற்கும் முறையிலும், வகுப்பறைக் கல்வி மற்றும் ஆன்லைன் இரண்டும் முக்கியத்துவம் பெரும். 




பல்துறை அறிவு



கொரோனா காரணமாக ஒருபுறம் வேலை இழப்பு நிகழ்ந்தாலும், இளம் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சிறந்த எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு அதிகரித்தே காணப்பட்டது. தொழில் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் வேலை வழங்கின. மாணவர்கள் தாங்கள் படிக்கும் துறை சார்ந்து மட்டுமல்லாது, பலதுறை சார்ந்த அறிவை பெரும்போது தான் அவர்களுக்கு வாய்ப்புகள் மிகுந்து காணப்படும். உதாரணமாக, மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு, ரோபாட்டிக்ஸ், கோடிங், மெக்கட்ரானிக்ஸ், ஐ.ஓ.டி., சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு, ஹெல்த், இன்சூரன்ஸ் என பணி சார்ந்த துறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 




டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன்



டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் ஏற்கனவே நிகழத்துவங்கிவிட்ட நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்படும். தொழில்நுட்பங்கள் முற்றிலும் மாற்றம் அடையும். 5ஜி தொழில்நுட்பம் முழு பயன்பாட்டிற்கு வரும். பின்டெக், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றின் தாக்கம் அதிகரிக்கும். பெரும்பாலான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகும். உற்பத்தி துறையிலும் டிஜிட்டலின் தாக்கம் அதிகரிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முக்கியத்துவம் பெரும்.



ஆகவே, இனிவரும் காலங்களில் இன்ஜினியரிங் துறையில் ஏராளமான வாய்ப்புகள் பெருகும். அதேநேரம், அவை பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகத்தான் இருக்கும். சவால்கள் நிறைந்த வாய்ப்புகளுக்கு எற்ப, மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முறையாக கற்றுக்கொள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தற்போதே, இந்திய பட்டதாரிகள் சர்வதேச அளவிலான வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்ற போதிலும், இனி வரும் காலங்களில் இந்நிலை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஊதியமும் அதிகமாக இருக்கும். 



- ஸ்ரீராம், தலைவர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி.





Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us