"மருத்துவராகி கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்வதே என் லட்சியம்" என தாவரவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மார்க் பெற்று, மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அபிநயா தமிழ்-189, ஆங்கிலம்-183, இயற்பியல்-188, வேதியியல்-182, தாவரவியல்-200, விலங்கியல்-197 என மொத்தம் 1,139 மார்க் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே வெள்ளிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவரது தந்தை அம்பிகாகுமார். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தாயார் சுபாஷிணி. அபிநயாவிற்கு, அபிஷேக் என்ற ஒரு தம்பியும் உள்ளார். தாவரவியல் பாடத்தில் மாநில முதலிடம் பிடித்த அபிநயா கூறியதாவது:
"தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் மாநில அளவில் மார்க் மற்றும் பிற பாடங்களில் மாநில ரேங்க் அல்லது மாவட்ட அளவில் இடம் பிடிக்கும் வகையில் மார்க் எடுக்க வேண்டும் என நினைத்து, விடா முயற்சியுடன் படித்து வந்தேன். அடிக்கடி ஏற்படும் மின்தடை படிப்பிற்கு இடையூறாக இருந்து வந்தது.
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் அதிக நேரம் ஒதுக்கி படித்து வந்தேன். என் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. தாவரவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய இறைவனுக்கு என் முதல் கண் வணக்கங்கள்.
மேலும், என் படிப்பிற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர், தம்பி, பள்ளி முதல்வர் அருட்சகோதரி லிசா பிரான்ஸிஸ், துணை முதல்வர் அருட்சகோதரி பிறேமா, ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர் காலத்தில் டாக்டராகி, கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்வதே என் லட்சியமாகும்." இவ்வாறு மாணவி அபிநயா கூறினார்.