லைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா? டிசம்பர் 02,2009,00:00 IST
கல்வி என்னும் அமைப்பின் அடித்தளமாக விளங்குவது நூலகங்கள் தான் என்பதை அறிவோம். புது நூலகங்களை உருவாக்கவும் இருக்கும் நூலககங்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாநில அரசும் ஏராளமான பணத்தை செலவிட்டாலும் அந்த செலவிடல் என்பது அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்பது கேள்விக்குரியதுதான். நூலகங்களைப் பாதுகாக்கும் மற்றும் நிர்வகிக்கும் முக்கியப் பணியைச் செய்பவர்கள் நூலகர்கள் தான். நூலகங்களை கோவில்களுக்கு நிகராக ஒப்பிடுபவர்கள் இருக்கின்றனர்.
கல்வி, அறிவு, தகவல் போன்றவற்றை உருவாக்கும் சக்தியின் ஆதாரமாகத் திகழ்பவை நூலகங்கள் தான். கல்வி தொடர்புடைய தகவல்களைப் பொதித்து வைத்துள்ள ஊற்றுக்களான நூல்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் துறையாக நூலக அறிவியல் உருவாகிறது. நூலகங்களை நாடுவோரின் தேவைக்கேற்ற நூல்களைக் கண்டறிவதிலும் அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதையும் நூலர்கள் செய்கின்றனர்.
நூலக அறிவியல் படித்து அதற்கேற்ற பணி புரியும் ஒருவர் டாகுமென்டேஷன், கையெழுத்துப் பிரதிகளை பாதுகாத்துப் பராமரிப்பது, புத்தகங்களை வரிசைப்படுத்துவது, பழைய பதிப்புகளை பாதுகாப்பது, தகவல்களை முறைப்படுத்துவது என்று எண்ணற்ற பணிகளைச் செய்கின்றனர்.
இத் துறையில் நுழைய விரும்பும் ஒருவர் நூல்களின் மீது அபரிமிதமான ஈடுபாடு இருப்பதுடன் தகவல் பரிமாற்றத்திறன், முறையான அணுகுமுறை, நிர்வாகத் திறன் போன்ற கூடுதல் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
இவற்றை சம்பந்தப் பட்ட படிப்பை மேற்கொண்டபின்போ அல்லது பணியில் சேர்ந்த பின்போ கூட ஒருவர் பெறலாம். சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.பில்., பி.எச்டி., என இத் துறையில் பல்வேறு நிலையில் படிப்புகள் உள்ளன.
கல்வித் துறையில் நூலககர்களுக்கு தனி மரியாதை எப்போதும் இருக்கிறது. இன்று இளைஞர்கள் அதிகமாக நூலகங்களை நாடுவதில்லை என்ற போதிலும் தனி மனிதனின் நிர்வாகத் திறமைகளை வெளிப்படுத்துவற்கேற்ற துறையாக இது விளங்குகிறது.
இப் படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் பொது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், தகவல் மையங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பிற பணிகளைப் போலவே இப் பணியில் இருப்பவருக்கும் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதால் சிறப்பான சம்பளத்தையும் துறையினர் பெறு-கின்றனர்.