இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், செப்டம்பர் முதல் இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முழு நிதியுதவியுடன் கூடிய 75 கல்வி உதவித்தொகைகளை வழங்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
செவனிங் உதவித்தொகை:
இத்திட்டத்தில் யு.கே.,வில் இந்திய மாணவர்கள் விரும்பும் எந்த ஒரு யு.கே., பல்கலைக்கழகத்திலும், விரும்பும் எந்த ஒரு ஓர் ஆண்டு முதுநிலை படிப்பையும் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. செவெனிங் திட்டம் என்பது 1983ம் ஆண்டு முதல் உலகளாவிய தலைவர்களை உருவாக்கும் நோக்கில் 150 நாடுகளில் வழங்கப்படும் யு.கே., அரசாங்கத்தின் சர்வதேச விருதுகள் திட்டமாகும்.
இதுவரை, இத்திட்டத்தில் 3,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதுவே, உலகளவில் அதிக செவனிங் உதவித்தொகையை பெற்ற நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உதவித்தொகை திட்டத்தில், கல்விக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவை அடங்கும். தேவையான கல்வித் தகுதிகளுடன் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் செவனிங் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
'ஸ்டெம்’ உதவித்தொகை:
இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் 'ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் சுமார் 18 உதவித்தொகைகளை மாணவிகளுக்கு வழங்குகிறது. இதன்படி, 150க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிப்புகளில் விருப்பமான படிப்பை மாணவிகள் தேர்வு செய்யலாம். இவற்றுடன், பிரிட்டிஷ் கவுன்சில் ஆறு ஆங்கில உதவித்தொகை திட்டத்தையும் வழங்குகிறது.
கைகோர்க்கும் நிறுவனங்கள்:
எச்.எஸ்.பி.சி., - 15 உதவித்தொகைகளையும், பியர்சன் இந்தியா - 2 உதவித்தொகைகளையும், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா சன்ஸ் மற்றும் டியோலிங்கோ ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு உதவித்தொகையையும் வழங்குகிறது.
ஒரு லட்சம் விசா:
"இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டில், இந்த உதவித்தொகை திட்டங்கள் ஒரு சிறந்த மைல்கல். இந்தியாவில் உள்ள செவனிங் உதவித்தொகை பெற்றவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள் அல்லது முதல் தலைமுறை மாணவர்கள். யு.கே.,விற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்லுறவிற்கான முக்கிய அம்சங்களில் கல்வியும் ஒன்று.
சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2022 வரையிலான கடந்த ஓர் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கல்வி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட இரு மடங்கு அதிகம்" என்று இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ், லண்டனில் நடந்த இந்தியா குளோபல் அமைப்பின் யு.கே.,- இந்திய வார விழாவில் குறிப்பிட்டுள்ளார்.