இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக பங்குச் சந்தை திறந்து விடப்பட்டு விட்டது. இதன் காரணமாக பங்குச் சந்தையில் மூலதனம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதோடு இத் துறையில் பணி வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தனியார் துறையில் புதிய நிறுவனங்களின் வருகையும் இத் துறையின் பணி வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்துள்ளது. பங்குச் சந்தையில் ஸ்டாக் எக்சேஞ்சும் மியூச்சுவல் பண்டும் அடங்கியுள்ளன. இந்தியப் பொருளாதாரத்தில் அதிக வேகத்தில் விரிவடைந்து வரும் துறை இது என்பதால் நல்ல பணி வாய்ப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். பங்குச் சந்தையில் மியூச்சுவல் பண்ட் என்பது தவிர்க்கமுடியாததாகி விட்டதால் இந்தியாவில் வேகமாக வளரும் துறையாக இது மாறியிருக்கிறது.
பொருளாதாரம் மற்றும் காமர்ஸ் படித்தவர்களுக்கு கேபிடல் மார்க்கெட் எனப்படும் பங்குச் சந்தைப் பணி வாய்ப்புகள் நன்றாகப் பொருந்தக்கூடியவை. ஆனால் எந்தத் துறைப் படிப்புகளை முடித்திருப்பவரும் இதில் இணையலாம்.
என்.எஸ்.இ.,யின் நிதிச் சந்தை சான்றிதழ் படிப்பானது ஒரு முக்கியமான தகுதியாக இருக்கிறது. இது ஆன்லைன் தேர்வு முறையாக நடத்தப்படுகிறது. செபியும் ஸ்டாக் மார்க்கெட்டில் இயங்கிடும் புரோக்கர்களும் டீலர்களும் இத் தேர்வுகளை முடித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மார்க்கெட்டிங்கில் மியூச்சுவல் பண்ட் விற்பனை செய்பவர்கள் கட்டாயம் ஏ.எம்.எப்.ஐ., என்னும் தேர்வில் தகுதி பெற்று ஏ.எம்.எப்.ஐ., அமைப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இத் தேர்வில் தகுதி பெற்றதிலிருந்து 5 ஆண்டுகள் வரை இத் தகுதி செல்லுபடியாகும்.