ஐ.பி.பி.எஸ்., என பிரபலமாக அறியப்படும் 'வங்கி
பணியாளர் தேர்வாணையம்’, சர்வதேச தரத்தில் மதிப்பீடு மற்றும் பணியாளர்
தேர்வை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு.
முக்கியத்துவம்:
வங்கி,
காப்பீடு மற்றும் நிதி அமைப்புகளுக்கு தேவையான மற்றும் தகுதியான
பணியாளர்களை தேர்வு செய்வதை முக்கிய பணியாக கொண்டுள்ளது. பணிக்கு தேவையான
திறன் படைத்த நபர்களை வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் வாயிலாகவும் தேர்வு
நடத்தும் திறன் பெற்றுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் மட்டும் பல்வேறு
ஐ.பி.பி.எஸ்., தேர்வுகளை எழுத, 92 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது இங்கே
குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரம்:
சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860
மற்றும் பம்பாய் பொது அறக்கட்டளை சட்டம் 1950ன்படி, ஒரு பொது
அறக்கட்டளையின் கீழ் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள்
சங்கத்தின் ‘அசோசியேட் உறுப்பினர்’ ஆகவும் இந்நிறுவனம் செயல்படுகிறது.
பணிகள்:
நவீன
தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் அனுபவத்தைக் கொண்டு, அனைத்து
செயல்பாடுகளையும் விரைவாகவும், துல்லியமாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும்
மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான பணியார்களை தேர்வு செய்தல், அதற்கான தேர்வுகளை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் உட்பட ஏராளமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்ப, பொருத்தமான அளவீட்டு சோதனைகள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி, மதிப்பீடு செய்து, தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதுடன் இதர சேவைகளையும் வழங்கி வருகிறது.
ஐ.பி.பி.எஸ்.,
சமூகத்தின் வழக்கமான உறுப்பினர்களான பொதுத் துறை வங்கிகள், பாரத ஸ்டேட்
வங்கி, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நபார்டு மற்றும் ஐ.டி.பி.ஐ., ஆகிய
வங்கிகளுக்கு தேவையான மனித வளத்தை தேர்வு செய்து தருவதை முக்கிய பணியாக
கொண்டுள்ளது.
மேலும், கிராமப்புற வங்கிகள், எஸ்.ஐ.டி.பி.ஐ., எல்.ஐ.சி., பொது காப்பீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் தேவையான சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. சில முன்னணி பல்கலைக்கழகங்ள் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை தேர்வை திறம்பட நடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.