உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது. நம் மாநிலத்தில் படித்த பட்டதாரிகள் உலகளவில் உள்ள சிறந்த ஐ.டி., நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர்.
நாட்டிலேயே தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. 1980ம் ஆண்டுகளில் இன்ஜினியரிங் படிப்பில், வெறும் 2 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருந்த நிலையில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இத்தைய பெரும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள்.
மாற்றம் சாத்தியம்
நம் நாட்டில் ஆன்லைன் வழி கல்வி சாத்தியமா என்ற ஒரு சந்தேகம் நிலவிவந்த நிலையில், கொரோனா காலத்தில் சில நாட்களிலேயே அது சாத்தியமானது. அதேபோல், எத்தகைய மாற்றமும் சாத்தியமானதுதான். இன்று குறிப்பாக இன்ஜினியரிங் துறையில் ஏராளமான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. புதிய இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், கல்வி நிறுவனங்கள் வாய்ப்புகள் மிகுந்த துறைகளை கண்டறிந்து, அவை குறித்த படிப்புகளை வழங்குவதும், தரமான கல்வி வழங்குவதும் அவசியம். அடுத்த 10 ஆண்டுகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதையும் கணித்து, அதற்கேட்ப படிப்புகள் வழங்கப்படுவதிலும், பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் எப்போதுமே இருக்கக் கூடிய துறையாக மாறிவிட்டது. அனைத்து வகையான உணவிலும் எப்படி உப்பு தவிர்க்க முடியாததாக உள்ளதோ, அதேபோல் அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டையும் இனி தவிர்க்க முடியாது. அதற்காக கம்ப்யூட்டர் மட்டுமே கற்றுக்கொள்வது போதுமானது அல்ல. கம்ப்யூட்டர் சார்ந்து ஏ.ஐ., சாட்ஜிபிடி., போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இன்று முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
கம்ப்யூட்டரை பயன்படுத்தி அனைத்து துறைகளிலும் எந்த மாதிரியான முன்னேற்றத்தை அடைய முடியும் என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். இன்ஜினியரிங் என்றாலே 4-5 துறைகள் மட்டுமே மாணவர்களின் பிரதான தேர்வாக உள்ளது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், என்விரான்மென்டல் இன்ஜினியரிங், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
மனிதநேயத்துடன் கல்வி
மாணவர்கள் அவர்கள் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். வேலை வாய்ப்பை மையப்படுத்தியே பெரும்பாலான மாணவர்கள் இன்று இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்கின்றனர். அதற்கேட்ப, தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இன்ஜினியரிங் மாணவரும், படிப்பை நிறைவு செய்யவதற்குள் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி அதற்கான உரிமத்தை பெற வேண்டும். இவற்றோடு மனிதநேயத்துடனும் சமூகத்தில் செயல்பட வேண்டும். மனிதநேயத்தோடு மனிதர்களை வளர்ப்பதே கல்வியின் பிராதான பணி.
-அனுஷா ரவி, சி.இ.ஓ., மற்றும் தலைவர், பார்க் கல்வி குழுமங்கள்.