கடலூர் செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்ரி, பொது செவிலியம் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். பி.எஸ்சி., நர்சிங் படித்து சிறந்த நர்சாக பணிபுரிவதே எனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்ரி, பொது செவிலியம் பாடத்தில் 200க்கு 188 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இதுகுறித்து மாணவி காயத்திரி கூறுகையில், "எனது தாயார் கடலூர் உழவர் சந்தைக்கு வாழைத் தண்டு விற்பனைக்குச் செல்லும் போது என்னை அதிகாலை 3:00 மணிக்கு எழுப்பி விட்டுச் செல்வார். அது முதல் படிப்பதை எனது வழக்கமாக கொண்டிருந்தேன்.
பள்ளி ஆசிரியர்கள் பள்ளி நேரத்திற்குப் பின்னர் சிறப்பு வகுப்புகள் நடத்தி எங்களுக்கு சிறந்த பயிற்சி அளித்தனர். மாநில அளவில் முதல் இடம் பிடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பி.எஸ்சி., நர்சிங் படித்து சிறந்த நர்சாக பணிபுரிவதே எனது விருப்பம்" என்றார்.