உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. மற்ற நாட்டினர்களைவிடவும், நமது இளைஞர்களுக்கு திறமை அதிகமாக உள்ளது. அவரவர் திறமை என்ன என்பதை முதலில் அனைத்து இளைஞர்களும் உணர்ந்திட வேண்டும். அத்தகைய உணர்தலுக்கு வித்திடுவதே சரியான கல்வி.
ஆனால், ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்து சென்று, 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவர்கள் கையாண்ட அடிமைத்தனத்தில் இருந்து நமது மாணவர்கள் வெளியேராமால் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில், புரிந்து படிக்காமல் மதிப்பெண்களை மட்டுமே பிரதானமாகக் கொண்ட மனப்பாடம் செய்யும் கல்வி முறையை பல ஆண்டுகாலமாக நாம் பின்பற்றி வருவதே!
அத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து விடுபடும் வகையில், கற்கும் எந்த ஒரு பாடத்தையும், செயல்முறையில் பயன்படுத்தி, புரிந்து பயிலும் முறையை தேசிய கல்விக் கொள்கை வழங்குகிறது. அனைத்தையும் செயல்முறையில் கையாண்டு, உணர்ந்து கற்பதால் திறனும் மேம்படுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பை தேர்வு செய்தாலும், அனைத்து மாணவர்களாலும் இதர துறை சார்ந்த பாடத்தை படிக்க முடியும். அதன் வாயிலாக, பிற துறை சார்ந்த திறன்களையும் பெற முடியும்.
விரும்பிய பாடப்பிரிவுகளை, விரும்பிய நேரத்தில் பயின்று சான்றிதழ், டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு என படிப்படியாக முன்னேறும் அரிய வாய்ப்பை வழங்குவதோடு, ஆசிரியர்களின் திறனையும் மேம்படுத்துகிறது. தமிழ் மீதான பற்றையும், இன்ஜினியரிங் துறையில் பயன்படுத்த இயலும் வாய்ப்பை தேசிய கல்விக் கொள்கை வழங்குகிறது.
நமது அறிவை அடிப்படையில் இருந்து மேம்படுத்த, சிறப்பான பள்ளி கல்வி மிக அவசியம். ஆகையால், அடிப்படையில் இருந்து மாற்றத்தை கொண்டுவரும் வகையில், சிறப்பான பள்ளி கல்வியை வழங்குவதையும் உறுதி செய்கிறது. இவ்வாறு திறனும், அறிவும் கலந்த திறமை வளர்வதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டிருந்தால், உலக அரங்கில் மேலும் சிறப்பான இடத்தை இந்தியாவில் பிடித்திருக்க முடியும்.
நன்மையும், தீமையும்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், புதிய புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தாலும் நல்லதும் உண்டு; தீயதும் உண்டு. உதாரணமாக, அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பேராசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை, மதுரை அருகே ஆண்டிப்பட்டியில் இருந்து படிக்கும் வாய்ப்பை தொழில்நுட்பமே வழங்குகிறது.
ஆகையால், தொழில்நுட்பத்தை இதுபோன்று நல்லவற்றிற்கு மட்டுமே பயன்படுத்துவோம். அதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவோம். இத்தருணத்தில் ஆசிரியர்கள், பெற்றோர், கல்வி நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதை உறுதிசெய்வோம்.
- பேராசிரியர் பி.எஸ். சத்யநாராயணா, துணை வேந்தர், ஜி.டி. கோயன்கா பல்கலைக்கழகம், ஹரியானா.
vc@gdgu.org