நம் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வெளிநாட்டு வளாகத்தை பிரிட்டனில் நிறுவ, அந்நாட்டு கல்வி நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
அதேபோல், பிரிட்டனைச் சேர்ந்த பல பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்கள் கிளை வளாகங்களை அமைப்பதில் ஆர்வமாக உள்ளன. அதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் இறுதி ஒழுங்குமுறை வழிகாட்டலுக்காக காத்திருப்பதாக, பிரிட்டனின் உயர்மட்ட அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில், ஐந்து பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நிலையில், அத்தகைய இரு தரப்பு கல்வி பரிமாற்றத்தை இந்தியாவிலும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு அதிகாரிகள், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று, பேராசிரியர்களுடன் கலந்துரையாடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.