பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த, புரொபஷனல் படிப்பை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு, ஓ.என்.ஜி.சி., அறக்கட்டளை உதவித்தொகை வழங்குகிறது.
நாட்டின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான ஓ.என்.ஜி.சி., சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கில் அறக்கட்டளையை துவக்கி, உதவித்தொகை வழங்கி வருகிறது.
உதவித்தொகை: இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் வழங்கப்படுகிறது. நேரடியாக மாணவர்களது வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்படுகிறது.
உதவித்தொகை எண்ணிக்கை: மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவற்றில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 1,000 பேருக்கு இந்த உதவித்தொகை ஒதுக்கப்படுகிறது. பொதுப்பிரிவை சேர்ந்த பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த மாணவர்கள் 500 பேருக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும், மொத்த உதவித்தொகை எண்ணிக்கையில் 50 சதவீதம் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
படிப்புகள்:
இன்ஜினியரிங்
எம்.பி.பி.எஸ்.,
எம்.பி.ஏ.,
ஜியாலஜி அல்லது ஜியோபிசிக்ஸ் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு.
தகுதிகள்:
* 2023-24ம் கல்வி ஆண்டில் முழுநேர படிப்பில், சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
* இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், அவர்களது 12ம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
* முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், அவர்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
* குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவினராக இருப்பின், ரூ. 4.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் போதுமானது.
வயது வரம்பு: அக்டோபர் 16, 2023ம் தேதியின்படி, 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ongcscholar.org/#/schemeAndRules/apply எனும் இணையதளத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: https://ongcscholar.org/