விவாகரத்தாகி பிரிந்து வாழும் பெற்றோரின் பிள்ளைகள் கணிதத்திலும், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதிலும் பின்தங்கியுள்ளனர் என்று கூறுகிறது ஒரு ஆய்வு
அமெரிக்காவின் விஸ்கான்சின்-மடிசன் பல்கலைக்கழகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் முடிவில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
பள்ளியில் தனியாக இருக்கும் குழந்தைகள், பிரிந்து வாழும் பெற்றோரின் குழந்தைகள், சரியாக படிக்காத குழந்தைகள் என பல்வேறு கோணத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பெற்றோரின் விவாகரத்து, பிள்ளைகளின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. மன அளவில் இவர்கள் பாதிக்கப்படுவதாலும், இவர்களது சுட்டித்தனமும், சுறுசுறுப்பும் குறைந்துவிடுகிறது. இதனால் கணிதத்தில் இவர்களால் சிறப்பாக இருக்க முடிவதில்லை. அதேப்போல, தங்களது வகுப்பில் படிக்கும் பிள்ளைகளுடன் அவர்களால் இயல்பாக பழக முடிவதில்லை.
தங்களை குறைவாக மதிப்பிடல், எப்போதும் ஒருவித சோகத்தில் இருத்தல் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.
பெற்றோர்கள் ஒன்றாக இருக்கும் வரை, குழந்தைகளைப் பற்றி எந்த பள்ளி நிர்வாகமும் குறை சொல்வது இல்லை. எப்போது பெற்றோர் பிரிவது பற்றி பேச்சு துவங்குகிறதோ, அப்போதே பிள்ளைகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, பள்ளிகள் பெற்றோரை அழைத்து புகார் அளிப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளின் பழக்கவழக்கத்திற்கு பெற்றவர்கள்தான் மிக முக்கிய உதாரணமாகும். எனவே, பெற்றோரின் சண்டையும், பிரிவும் பிள்ளைகளை இந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.