"எதையும் திட்டமிட்டு படித்தால், நிச்சயம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்" என்று, தமிழ் பாடத்தில் மாநில அளவில், மூன்றாம் இடம் பிடித்த மாணவி கூறினார்.
சேலையூர் சீயோன் பள்ளி மாணவி ப்ளேவ் ஷீனு, தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் 191, இயற்பியல் 197, வேதியியல் 199, கணிணி அறிவியல் 200, கணிதம் 200 என, மொத்தம் 1185 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: "எந்த பாடத்தை படித்தாலும், முழுமையாக படிக்க வேண்டும். காலையில், 4:00 முதல் 6:00 மணி வரையிலும், மாலையில், 6:30 முதல் 9:30 மணி வரையிலும் படிப்பேன். பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.
பள்ளியில் அடிக்கடி தேர்வு வைத்தது, அதிக மதிப்பெண்களை பெற உதவியாக இருந்தது. வீட்டில் படிக்கும் போது, பாடத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், பெற்றோர் கற்று கொடுப்பர். அவ்வப்போது, டிவி பார்ப்பேன்.
எந்த பாடத்தையும் திட்டமிட்டு படித்தால், நிச்சயம் அதிக மதிப்பெண்களை பெற முடியும். விமானி ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்." இவ்வாறு, ப்ளேவ் ஷீனு கூறினார்.