திருச்சி மாவட்டம் துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்திரி தமிழ் 98, ஆங்கிலம், கணிதம், அறிவியல் 100, சமூக அறிவியலில் 99 என 497 மார்க் பெற்று மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றார்.
மாணவி காயத்திரியின் அப்பா மணிவேல் ஜோதிடராக உள்ளார். அம்மா புவனேஸ்வரி. அண்ணன் கார்த்திகேயன், கோவை சி.ஐ.டி., கல்லூரியில் பி.இ., மெக்கானிக்கல் படிக்கிறார்.
மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற காயத்திரி கூறியதாவது: "மாநில அளவில் இரண்டாம் இடமும், ஆங்கிலத்தில் சென்டம் எடுத்து மாநிலத்தில் முதல் இடமும் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மாநில அளவில் ரேங்க் எடுக்க வேண்டும் என உறுதியுடன் படித்தேன்.
இதற்கு எனது பெற்றோரும், பள்ளி சேர்மன் ராமமூர்த்தி, இயக்குனர் பிரேமலதா, முதல்வர் ராமசாமி மற்றும் எனது வகுப்பு ஆசிரியர்கள் பெரிதும் உதவினர். தினமும் காலை, மாலை தவறாமல் படிப்பேன். செய்முறை தேர்வு உட்பட தினமும் பாடங்களில் ஆசிரியர் வைக்கும் தேர்வுகளில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வேன்.
எங்கள் வீட்டில் அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்தது முதல் கடந்த நான்கு ஆண்டாக கேபிள் "டிவி" இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நானும் "டிவி" பார்ப்பதில்லை.
எனக்கு கார்டியாலஜி சிறப்பு மருத்துவராக ஆக வேண்டும் என்பது ஆசை, ப்ளஸ் 2 தேர்விலும் அதற்குரிய பாடங்களை எடுத்து படிப்பேன்." இவ்வாறு சாதனை மாணவி காயத்ரி கூறினார்.