எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 497 மார்க் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடத்தையும், புதுகை மாவட்ட அளவில் முதலிடத்தையும் கந்தர்வக்கோட்டை வித்ய விகாஷ் மெட்ரிக் பள்ளி மாணவி ராஜேஸ்வரி வகித்து சாதனை படைத்துள்ளார்.
புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டையிலுள்ள வித்ய விகாஷ் மெட்ரிக் பள்ளி மாணவி ராஜேஸ்வரி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 500க்கு 497 மார்க் பெற்று தமிழகத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
மாணவி ராஜேஸ்வரி பாடவாரியாக பெற்ற மார்க் விபரம் வருமாறு: தமிழ் 99, ஆங்கிலம் 99, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என, மொத்தம் 497 மார்க் பெற்றுள்ளார்.
மாணவி ராஜேஸ்வரியின் தந்தை ராஜாங்கம், திருமானூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். தாய் ரேவதி, தஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
மாநிலத்தில், இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்த மாணவி ராஜேஸ்வரி அளித்த பேட்டி:
"எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்று சாதனை படைக்க வேண்டும் என, விரும்பினேன். இதை மனதில் கொண்டு, பாடங்களை துவக்கம் முதலே கவனம் செலுத்தி படித்தேன். தினசரி பாடங்களை படித்தும், எழுதியும் சரிபார்த்தேன். பள்ளியிலும் மாதாமாதம் தவறாமல் நடத்தப்படும் மாதாந்திர தேர்வுகளில் பங்கேற்று, அக்கறையுடன் எழுதி வந்தேன்.
தேர்வுக்கு பின், ஏற்படும் சந்தேகத்தை ஆசிரியர்களிடம் கூறி தெளிவு பெற்றேன். தினமும் விடுமுறை தினம் என்றாலும் அதிகாலையிலேய எழுந்து படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். எனக்கு உறுதுணையாக ஆசிரியர்கள் இருந்தனர். இதனாலேயே அதிக மார்க் பெற்று சாதனை பெற முடிந்தது.
ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், மாநிலத்தில் முதலிடம் பெறுவது எனது ஆசை. எதிர்காலத்தில், டாக்டராகி ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும்." இவ்வாறு, அவர் கூறினார்.