தென்காசி, பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளி மாணவி ஷெர்லின் பொன் ஜெபா மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100,சமூக அறிவியல் 100 மொத்தம் 497 மார்க் பெற்றுள்ளார்.
மாணவியின் தந்தை சாமுவேல் கண்ணதாசன், முத்துமாலைபுரம் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். தாய் பொன் சகுந்தலா புலவனூர் அரசு பள்ளியின் ஆசிரியை. தம்பி சாம் பிரவின், அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.
சாதனை மாணவி ஷெர்லின் பொன் ஜெபா கூறுகையில், "எனது சாதனைக்கு பள்ளியே முழுக்காரணம். துவக்கத்தில் இருந்தே அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பயிற்சி கொடுத்தனர். மேலும் வகுப்பு ஆசிரியர் நிர்மல்ராஜ், கணித ஆசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சாதனை படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். அவர்கள் அளித்த ஊக்கம் தான் என்னை சாதனை படைக்க வைத்துள்ளது.
நான் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து படித்தேன். சனி, ஞாயிறு மட்டும் டி.வி.,பார்ப்பேன். மற்ற நாட்களின் டி.வி., பார்ப்பதை தவிர்த்தேன். இதே பள்ளியில் தொடர்ந்து படித்து பிளஸ் 2 தேர்வில் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.
தொடர்ந்து டாக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு. நிச்சயமாக நான் சாதிப்பேன். சாதனை படைக்க ஊக்கம் அளித்த பள்ளி முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.' என்றார்.