பத்தாம் வகுப்பு தேர்வில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி கபிலா 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடமும், மாவட்டத்தில் முதலிடமும் பிடித்து கல்வி சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவியின் சொந்த ஊர் சின்னசேலம் அடுத்த தென்சிறுவலூர் கிராமம். தந்தை காந்தரூபன், தாய் லதா. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
மாணவி கூறியதாவது, "பள்ளியில் நடக்கும் அனைத்துத் தேர்வுகளிலும் முதலிடம் பிடிப்பேன். காலை 4.30 மணிக்கு எழுந்து படிப்பேன். மாலை 7 முதல் 9 மணி வரை படிப்பேன். பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து படித்ததால் மாநில, மாவட்ட அளவில் சாதிக்க முடிந்தது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நன்கு கவனித்து அன்றே படித்து விடுவேன். பள்ளி தேர்வில் பிழைகளை ஆசிரியர்கள் சுட்டி காட்டினால் மறுபடியும் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.
என்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஆசிரியர்கள் வளர்த்தனர். பிளஸ் 2 தேர்விலும் மாநில அளவில் சாதித்து தந்தைக்கு நற்பெயரை வாங்கி தருவேன். எம்.பி.பி.எஸ்., படித்து ஏழை மக்களுக்கு உதவி செய்வேன். எனது பெற்றோரின் கஷ்டத்தையும் போக்குவேன். எனது சாதனைக்கு பெரும் பங்களிப்பாக இருந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்." இவ்வாறு மாணவி கபிலா கூறினார்.