நன்றாகப் படிக்காததற்கு என்ன காரணம் என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அடிப்படையில் கடின உழைப்பை மேற்கொள்ளாத சில மாணவர்கள், கடுமையாக உழைக்க வேண்டிய அறிவியல் பாடங்களில் சேர்ந்து விட்டு, அந்த படிப்பை குறை கூறுவதை நாம் பொதுவாகப் பார்க்கலாம்.
இப்படி அறிவியல் பாடங்கள் கடினமாக இருப்பதாகக் கூறும் பலரும் அடிப்படையில் சோம்பேறிகளாக இருப்பது தான் உண்மை. எனவே உங்களது பிரச்னை சோம்பேறித்தனம் தான் என்றால் உங்களால் வகுப்புகளில் கவனிக்க முடியாமல் போகலாம்.
பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என நீங்கள் எதையும் தள்ளி வைக்கும் பழக்கமுடையவராக இருக்கலாம். அப்படியென்றால் உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் பிளஸ் 2வுக்குப் பின் எந்த படிப்பில் நீங்கள் சேர்ந்தாலும் அதையும் இப்படித்தான் ஒப்பேற்றுவீர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த காரணமில்லாமல் வேறு பாடத்தில் நீங்கள் ஆர்வமுடையவராக இருந்தால் கட்டாயம் அதை நீங்கள் பிளஸ் 2வுக்குப் பின் படிக்கலாம். பி.பி.ஏ., பி.காம்., பி.சி.ஏ., பி.ஏவில் வரலாறு, பொருளாதாரம், ஓட்டல் மேனேஜ்மென்ட், மீடியா, அனிமேஷன், டிசைனிங் என இன்று எத்தனையோ படிப்புகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. ஆர்வத்தின் அடிப்படையில் உங்களது படிப்பை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.